புதுச்சேரியில் ஒரே நாள் இரவில் 19 செமீ மழை.. வெள்ளக்காடான சாலைகள்.. பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று அதிகாலை முதல் பெய்த கனமழையின் காரணமாக முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. புதுச்சேரியில் ஒரே நாளில் 19 செமீ மழை பெய்ததால் வெள்ளக்காடாக மாறியுள்ளது. வெள்ள நீரை வெளியேற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது.
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. எப்போதுமே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தால் அப்படியே மழையின் தாக்கமும் அங்கு நிச்சயம் இருக்கும். குறிப்பாக கடலை ஓட்டிய மாவட்டங்களில் வெப்பசலனத்தால் மழை பெய்யும்.
அந்த வகையில் புதுச்சேரியில் நேற்று பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது, அதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை முதல் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
குறிப்பாக புதுச்சேரி நகர பகுதிகளாக முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, ராஜ்பவன், முதலியார்பேட்டை ஆகிய பகுதிகளிலும், கிராம பகுதிகளான மதகடிப்பட்டு, கிருமாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகள் மழை நீரில் மூழ்கி உள்ளன.
புதுச்சேரியில் ஒரே நாள் இரவில் 19 செமீ மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மட்டுமல்ல, பக்கத்து மாவட்டமான கடலூரிலும் 19 செமீ மழை பெய்துள்ளது. கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. தேங்கிய மழை நீரை வெளியேற்ற அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
புதுச்சேரியில் பெய்த தொடர் கனமழை காரணமாக மழை நீர் தேங்கிய தாழ்வான பகுதிகளில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அதிகாரிகளுடன் மழை நீரில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டு தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனிடையே தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.