புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் என். ரங்கசாமி - பதவிபிரமாணம் செய்து வைத்த தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று பதவியேற்றுக்கொண்டார்.அவருக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிமையான விழாவில் அவருக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். நான்காவது முறையாக புதுச்சேரி முதல்வராக பதவியேற்றுள்ளார் ரங்கசாமி.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. இதில் என். ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டசபைத் தலைவராக, அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக எம்எல்ஏக்கள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர். புதிய ஆட்சி அமைப்பதற்காக கடந்த 3ஆம் தேதி மாலை ரங்கசாமி தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், புதுச்சேரி துணை நிலை ஆளுநரை சந்தித்தனர்.
அப்போது என்.ஆர் காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள் 16 பேரின் ஆதரவுடன் கூடிய கடிதத்தை வழங்கி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ரங்கசாமி.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்.. தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றார் திமுக தலைவர் ஸ்டாலின்
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஜெயபால், கட்சி நிர்வாகி பக்தவச்சலம் ஆகியோர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து மே 7ஆம் தேதி பிற்பகல் 1.20 மணிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர் ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்பதற்கான கடிதத்தை வழங்கினர்.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கடற்கரை காந்தி திடலில் நடைபெற இருந்த பதவியேற்பு விழா, ஆளுநர் மாளிகைக்கு மாற்றப்பட்டது. அங்கு நடைபெற்ற எளிய விழாவில் புதுச்சேரி மாநிலத்தின் 20வது முதல்வராக ரங்கசாமி இன்று பிற்பகல் 1.20 மணிக்கு பதவியேற்றுக்கொண்டார்.
ரங்கசாமிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற்றது. நான்காவது முறையாக புதுச்சேரியின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டுள்ளார் ரங்கசாமி.