இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை.. இதுதான் ஸ்டாலினின் மதசார்பற்ற நிலையா.. தமிழிசை ஆதங்கம்!
புதுச்சேரி: கிறிஸ்தவ பண்டிகைகளுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க மறுக்கிறார் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். வேறு மத நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும், அதிகாரத்தில் இருப்பதால் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை மனமார தெரிவித்து கொள்கிறோம் என்றும் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் பிரமாண்ட கேக்கை துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி இருவரும் இணைந்து வெட்டி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்களுக்கு வழங்கினர்.
மத எல்லைகளை கடந்து வாழ்த்துக்களை பகிர வேண்டும்.. ஆனால் தமிழகத்திலோ.. புதுவை ஆளுநர் தமிழிசை ஆதங்கம்
தமிழிசை செளந்தரராஜன் பேட்டி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், வரும் புதிய ஆண்டு கொரோனா இல்லாத ஆண்டாக இருக்க வேண்டும். வரும் புதன்கிழமையில் இருந்து உருமாறிய கொரோனாவை கண்டறியும் மையம் அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட உள்ளது. மேலும் கூட்டமாக இருக்கும் இடங்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும்.
புத்தாண்டுக்கு கட்டுப்பாடுகள்?
அனைத்து வகையிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதையும் எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தயாராக உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களில் மிக கவனமாக முகக்கவசம் அணிய வேண்டும் . புத்தாண்டு கொண்டாட்டங்களில் எந்தவித கட்டுப்பாடுகள் இல்லை என்று தெரிவித்தார்.
சிபிஎஸ்இ பாடத்திட்டம்
பின்னர் ஏழை மாணவர்களும் பயனளிக்கும் வகையில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமையப்போகின்றது இதில் எழும் வதந்திகளுக்கு இடமில்லை. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாயம் இருக்கும். தமிழை தமிழிசை நசுக்குகின்றார் என்ற விமர்சனத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த விவகாரத்தை அரசியாலாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
புதுச்சேரி மாநில அந்தஸ்து
தொடர்ந்து, மாநில அந்தஸ்து விவகாரம் எனக்கு நன்றாக தெரியும். மாநிலத்திற்கான அனைத்து திட்டங்களும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் கிடைக்கும். தற்போது மாநில அந்தஸ்து விவகாரம் குறித்து பேசுவோர் பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் ஏன் மாநில அந்தஸ்து கிடைக்க வழிவகை செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். புதுச்சேரிக்கு ரூ.1400 கோடி மத்திய அரசு உதவி அளிக்கவுள்ளது. பொங்கல் பொருட்கள் இலவசாமக வழங்கும் கோப்பிற்கு ஒப்புதல் வழங்கியிருக்கின்றேன். வேறுமாடல் ஆட்சி புதுச்சேரிக்கு தேவையில்லை என்று தெரிவித்தார்.
முக ஸ்டாலின் வாழ்த்து
தொடர்ந்து, நாங்கள் வேறு மத நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும், அதிகாரத்தில் இருப்பதால் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை மனமார தெரிவித்து கொள்கிறோம். ஆனால் நான் சார்ந்து இருக்கும் தமிழகத்தின் முதலமைச்சர் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க மறுக்கிறார் என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது. மத எல்லைகளை கடந்து வாழ்த்துகளை பகிர வேண்டும். அதுதான் மதசார்பற்றது என்று தெரிவித்தார்.