திறக்க முடியலையா.. தூக்குய்யா.. பீரோவையே தூக்கிச்சென்று நகை, பணத்தை அள்ளிச்சென்ற கொள்ளையர்கள்!
புதுச்சேரி: புதுச்சேரி அருகே பூட்டிய வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை வெளியே தூக்கிச் சென்று, உடைத்து அதிலிருந்த 3 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் ராயப்பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் குமார். டிரைவரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் மாமியார் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்து பீரோவை திறந்து பார்த்துள்ளனர். ஆனால் பீரோவை திறக்கமுடியவில்லை.
பீரோவை உடைத்தால் சத்தம் வரும் சத்தம் வந்தால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்க அலர்ட் ஆகிவிடுவார்கள் என்று எண்ணிய திருடர்கள் பீரோவை அலேக்காக வெளியே தூக்கிச்சென்றனர். இருட்டான இடத்தை தேடிய கொள்ளையர்கள் அருகில் இருந்த சவுக்கு தோப்புக்கு பீரோவை அப்படியே தூக்கிச்சென்றுள்ளனர்.
இரவு நேரத்தில் சவுக்கு தோப்பில் இருந்த கும்மிருட்டில் வைத்து பீரோவை உடைத்துள்ளனர். பின்னர் ஆர அமர பீரோவை ஆராய்ந்த கொள்ளையர்கள் அதிலிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும், 3 பவுன் நகையையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் மாமியார் வீட்டிற்கு சென்றிருந்த இன்று காலை குமார் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த பீரோ காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பீரோவே கொள்ளை போனதை கண்டு பதறிய குமார் இதுதொடர்பாக ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதில் சவுக்கு தோப்பில் இருந்த பீரோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பீரோவை தூக்கிச்சென்று கொள்ளையடித்த கொள்ளையர்கள் யார் என்பது தெரியவில்லை. பீரோவை தூக்கிச்சென்று கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பீரோவையே தூக்கிச் சென்று நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.