ஹெல்மெட்டு…சீட் பெல்ட்டு..! பிடி ஸ்வீட்டு..! பாராட்டிய புதுச்சேரி போலீஸ்..! குழம்பிய வாகன ஓட்டிகள்
புதுச்சேரி:ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் போட்டு வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு இனிப்புகளை கொடுத்து, புதுச்சேரி போலீசார் பாராட்டு தெரிவித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக.. இனிப்புகளை எதற்காக பயன்படுத்துவோம்? ஒரு நல்ல இனிமையான.. பசுமையான மறக்க முடியாத அல்லது சந்தோஷமான தருணத்தில்… இனிப்பை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு தான் எந்த மகிழ்ச்சியான நிகழ்விலும் இனிப்பை பரிமாறுவது.
பிறந்த நாள்… திருமண நாள்… அதிக மதிப்பெண் எடுத்தால்.. என இனிப்புகளுக்கான நிறைய கொண்டாட்டங்கள் உள்ளன. ஆனால்… அதை ஒட்டு மொத்தமாக தூக்கிச் சாப்பிடும் விதமாக புதுச்சேரி போலீசார் நடவடிக்கை உள்ளது தான் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
போலீசாரின் கைகளில் இனிப்பு
புதுச்சேரியில் வழக்கம் போல... ராஜீவ் காந்தி சிக்னல் வழியாக இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் அனைவரும் சென்று கொண்டிருக்க... லத்தியை வைத்துக் கொண்டிருக்க வேண்டிய கைகளில் இனிப்புகளுடன் போலீசார் நிற்க.. அனைவரின் கண்களிலும் ஆயிரம் வாட்ஸ் ஆச்சரியம்.
பாராட்டு தெரிவித்த போலீசார்
அதிலும் ஹெல்மெட் அணிந்தவர்கள், கார்களில் சீட் பெல்ட் அணிந்தவர்களை தேடிச் சென்று பிடித்தனர் புதுச்சேரி போலீசார். ஹெல்மெட் அணிந்து.. காரில் சீட் பெல்ட் அணிந்து விதிகளை கடைபிடித்தபடி சென்ற நாம் என்ன தவறு செய்தோம் என்று அவர்கள் முழிக்க... கைகளில் இருந்த இனிப்புகளை அவர்களிடம் வாழ்த்து தெரிவித்தனர் போலீசார்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, வித்தியாசமான முறையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர் புதுச்சேரி போலீசார். சாலை பாதுகாப்பு குறித்து போக்குவரத்து போலீசாரின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
சாலை பாதுகாப்பு
இதுகுறித்து குறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது: புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில் 30 வது சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு கடந்த 4 ஆம் தேதி முதல் வரும் 10 ம் தேதி வரை 'சாலை பாதுகாப்பே உயிர் பாதுகாப்பு' என்ற கருத்தின் அடிப்படையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
பேரணிகள், நிகழ்ச்சிகள்
சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாகனப் பேரணி, பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக சாலை விதிகளை சரியான முறையில் கடைபிடிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தோம். அதன் மூலம் மற்றவர்களுக்கும் சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்று கூறினர்.