கல்யாண ரிசப்ஷன் தாம்பூல பையில் குவாட்டர் பாட்டில் கூடவே பிஸ்கட்..புதுச்சேரியில் உறவினர்கள் அதிர்ச்சி
புதுச்சேரி: திருமணத்திற்கு வந்தவர்களுக்கு கல்யாண தாம்பூல பையில் தேங்காய் பழம் வெற்றிலை பாக்குடன் மதுபாட்டிலும் சேர்த்து வழங்கியது புதுச்சேரியில் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தவறான முன்னுதாரணம் என்று கூறிய உறவினர்கள் இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இருமனங்கள் இணையும் உறவான திருமண விழாவில் உறவினர்கள், நண்பர்களை அழைத்து மணமக்களை வாழ்த்த கூறி விருந்து வைப்பார்கள். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மகிழ்ச்சியோடு தாம்பூலப்பை பரிசளிப்பார்கள். மணமக்கள் வீட்டில் கொடுக்குட அந்த பையில் பழங்கள், தேங்காய், பிஸ்கெட் பாக்கெட், பாத்திரங்கள்,இனிப்புகள் என வைத்து வழங்குவர்.
தற்போது திருமண விழாக்களில் பசுமையை பரப்பும் முயற்சியாக தாம்பூலப் பையில் மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. புத்தகங்களும் கூட வழங்கப்படுகின்றன. இதுபோன்ற பரிசுப்பொருட்கள் கொடுக்கும் திருமண வீட்டினரை உறவினர்கள் பாராட்டுகின்றனர்.
கடந்த ஆண்டு மதுரை விசுவநாதபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ரமேஷ், புதிய முயற்சியாக தனது மகள் அகல்யாவின் திருமண விழாவில் பங்கேற்ற உறவினர்கள், நண்பர்களுக்கு தாம்பூல பையில் பழம், தேங்காய் வைப்பதற்கு பதிலாக புத்தகங்களை வைத்துக் கொடுத்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பொறுப்பில் இருக்கும் ரமேஷ் புத்தகப் பிரியர். மேலும் தனது உறவினர்கள், நண்பர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புத்தகங்களை வழங்குவார். ஏற்கெனவே அவர் பணி ஓய்வு விழாவில் கூட அனைவருக்கும் புத்தகங்களையே அன்பளிப்பாக வழங்கினார்.
இப்போதோ திருமண தாம்பூல பைகளில் மதுபாட்டில் கொடுக்கத் தொடங்கி விட்டனர். புதுச்சேரியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் தாம்பூலப்பையில் தேங்காய், பழங்களுடன் மதுபாட்டிலும் கூடவே பிஸ்கெட் பாக்கெட்டும் கொடுத்துள்ளனர். ஒரு பெட்டி நிறைய மது பாட்டில்களை வைத்துக்கொண்டு தாம்பூல பை வாங்கும் போது ஒரு குவர்ட்டர் பாட்டிலை போட்டு கொடுத்தனர்.
புதுச்சேரி கல்யாண ரிசப்சனுக்கு சென்ற உறவினர்களுக்கு மணமகள் வீட்டார் செய்த இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என்று விழாவிற்கு வந்த உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மணமக்களை வாழ்த்த வருபவர்களுக்கு விஷத்தை கொடுப்பது போல தாம்பூல பையில் மது பாட்டிலை வைத்து கொடுக்கலாமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

நம் ஊரில் காது குத்து, கல்யாணம் உள்ளிட்ட பல விழாக்களிலும் மது விருந்து கொடுப்பது வழக்கமாகி வருகிறது. திருமண விழாக்களில் தனியாக முதல்நாளே பேச்சிலர் பார்ட்டி என மது விருந்து கொடுப்பார்கள். தமிழ்நாட்டில் திருமண மண்டபங்களில் மது விருந்து நடத்த அனுமதி அளிக்கப்பட்டதாக வந்த தகவல் பரவிய உடனேயே கடும் எதிர்ப்பு எழுந்தது அந்த அறிவிப்பு உடனடியாக வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் புது கலாச்சாரமாக தாம்பூல பையில் மதுபாட்டிலை வைத்து கொடுத்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications