"சைலண்ட்"டாக காத்திருக்கும் நமச்சிவாயம்.. கைக்கெட்டும் தூரத்தில் "பதவி".. விட்டதை இப்போது பிடிப்பாரா
புதுச்சேரியில் நமச்சிவாயம் என்ன முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
புதுச்சேரி: புதுச்சேரி நமச்சிவாயம் மிக மிக அமைதியாக தனது திருப்பத்திற்காக காத்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியின் அரசியல் சூழல் மிக மிக வித்தியாசமானது... தேசிய கட்சிகளுக்குத்தான் அங்கு மதிப்பும், மரியாதையும் அதிகம். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்தது புதுச்சேரி.. அதை உடைத்து தன் பக்கம் கொண்டு வந்தவர் முன்னாள் காங்கிரஸ்காரரான என்.ரங்கசாமி.
என்.ரங்கசாமிக்காக விழுந்த வாக்குகள்தான் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக - அதிமுக கூட்டணிக்கு அதிக சீட்டுகள் கிடைக்க முக்கியக் காரணமே... ஆனால் பாஜவுடன் கூட்டணி வைத்ததால் ஏற்படும் பலனை தற்போது ரங்கசாமி அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறார்.

புதுச்சேரி
வழக்கமாக பல மாநிலங்களில் அமல்படுத்திய பார்முலாவுடன்தான் புதுச்சேரியிலும் களம் இறங்கியிருக்கிறது பாஜக. இதை என். ரங்கசாமி எதிர்பார்க்கவில்லை என்று கூற முடியாது. அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர் ரங்கசாமி. இதை விட அதிரடிகளையும், திட்டங்களையும் பார்த்த பழுத்த அரசியல்வாதிதான் ரங்கசாமி.

பாசிட்டிவ் செய்தி
எனவே பாஜக எப்படியெல்லாம் பாயக் கூடும் என்பதை முன்கூட்டியே எதிர்பார்த்துதான் பல காரியங்களை அவர் முன்பே செய்து பலமான அஸ்திவாரத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளார். ஆனால் அதையும் மீறி பாஜகவின் கரங்கள் வேகமாக வளைக்க ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில்தான் அவருக்கு திடீரென கொரோனா பாசிட்டிவ் என செய்திகள் வந்தன. புதுச்சேரியில் அட்மிட் ஆகாமல் சென்னையில் வந்து அட்மிட் ஆகியுள்ளார் ரங்கசாமி. இனி அவர் திரும்பி வரும் வரை அமைச்சர்கள் யாரும் பதவியேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

அமைதி
தற்போது ரங்கசாமிக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. பாஜக அமைதி காக்கிறது. ஆனால் அதை விட முக்கியமான ஒரு நபர் மிக மிக அமைதியாக இருக்கிறார். அவர்தான் நமச்சிவாயம். இவர் வேறு யாருமல்ல ரங்கசாமியின் உறவினர்தான். நமச்சிவாயத்தின் கதை தனிக் கதையாகும்.

பாஜக
கடந்த முறை காங்கிரஸ் கட்சி புதுச்சேரியில் ரங்கசாமி ஆட்சியை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தபோது நமச்சிவாயம்தான் முதல்வராவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் திடீரென கட்சி மேலிடத்தால் உள்ளே திணிக்கப்பட்டார் நாராயணசாமி. அவர் எம்எல்ஏவாக கூட அப்போது இல்லை. இதனால் நமச்சிவாயம் கடும் அதிருப்தி அடைந்தார். ஆனால் அவரை நாராயணசாமியும், கட்சி மேலிடமும் சமரசப்படுத்தினர். இதனால் அமைதி காத்தார் நமச்சிவாயம். ஆனால் உள்ளூர அவர் அதிருப்தியுடன்தான் வலம் வந்தார். இதனால்தான் கடைசி நேரத்தில் அவரது தலைமையில் சிலர் கட்சியை விட்டு பிரிந்து பாஜக பக்கம் தாவினர். இதுதான் நாராயணசாமியின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்.

பாஜக
தற்போது நமச்சிவாயத்தின் தலைமையில் பாஜக 6 எம்எல்ஏக்களுடன் இந்த தேர்தலில் வெற்றி பெற்றது. இது என். ஆர். காங்கிரஸை விட 4 இடங்கள் குறைவுதான். ஆனால் தற்போது நியமன எம்எல்ஏக்களாக 3 பாஜகவினர் நியமிக்கப்பட்டிருப்பதால் பாஜகவின் பலம் 9 ஆக உயர்ந்து விட்டது. ஏனாம் சுயேச்சை எம்எல்ஏ பாஜகவுக்கு ஆதரவாக திரும்பியிருப்பதால் 10 பேராகி விட்டது பாஜகவின் பலம். இது என். ஆர். காங்கிரஸை அதிர வைத்துள்ளது. இன்னும் சில சுயேச்சைகளையும் பாஜக வளைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

முதல்வர் பதவி
ஆக அனைத்து ஏற்பாடுகளையும் பாஜக கச்சிதமாக செய்து விட்டது. தற்போது ஆட்சியைக் கவிழ்த்து விட்டு புதிய ஆட்சி அமைக்க வேண்டியது மட்டுமே பாக்கி. அதாவது முதல்வர் பதவியில் அமர நமச்சிவாயம் ரெடியாகி விட்டார். அந்த நாளுக்காக காத்திருக்கிறார். ரங்கசாமியின் முகத்திற்காக அவர் இறங்கிப் போவாரா என்று தெரியவில்லை. ஆனால் முதல்வர் பதவி என்பது அவரது நீண்ட கால கனவாகும். அது தற்போது அவரது கைக்கு எட்டும் தூரத்தில் வந்து விட்ட நிலையில் அதை அவர் விட்டுத் தருவாரா என்பது கேள்விதான்.

யோசனை
அதேசமயம், அவர் ரங்கசாமிக்காக ஆட்சியைக் கலைக்கும் யோசனைக்கு ஒத்துக் கொள்ள முன்வராவிட்டாலும் கூட பாஜக அமைதியாக இருக்க வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். எனவே வேறு யாரிடமோ முதல்வர் பதவியை பறி கொடுத்து விட்டு அடுத்த ஐந்து வருடமும் அவதிப்படுவதற்கு நாமே முதல்வராகி விடலாமே என்ற கணக்கில் நமச்சிவாயம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். போகப் போகத்தான் தெரியும்.












Click it and Unblock the Notifications