ரஜினி இரட்டை வேடம் போடுகிறார்... இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் முத்தரசன் விளாசல்
புதுக்கோட்டை: தமிழக உரிமை பிரச்சனைகளில் நடிகர் ரஜினிகாந்த் இரட்டை வேடம் போட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கீரமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் கூறினார்.
மேலும், திமுக கூட்டணி கட்சிகளை உடைக்க சதி நடப்பதாகவும், அந்தக் கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது என்றும் முத்தரசன் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரம்மாண்ட போராட்டம்
மக்கள் விருப்பத்திற்கு மாறாக டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முனைந்தால், வரலாறு காணாத வகையில் மக்களை ஒன்றுதிரட்டி மிகப் பிரம்மாண்ட முறையில் போராட்டங்களை முன்னெடுப்போம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மக்களின் கருத்தை அறியத்தேவையில்லை என்பது கண்டிக்கத்தக்கது என்றும், மக்கள் கருத்தை கேட்காமல் எந்த திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழக பிரச்சனை
தமிழக உரிமை, மற்றும் மக்கள் பிரச்சனைகளில் நடிகர் ரஜினிகாந்த் இதுவரை இரட்டை வேடம் போட்டு வருவதாகவும், அவர் திரைப்படத்தை பார்ப்பதற்கு திரையரங்குகளில் மூட்டைப்பூச்சிகள் மட்டுமே உள்ளதாக தெரிவதாகவும் முத்தரசன் விமர்சித்தார். தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்துமாறு பாஜகவை தவிர அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அது பற்றி வாயே திறக்கவில்லை என புகார் கூறினார். தமிழகத்தில் தமிழில் தான் குடமுழுக்கு நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

உடைக்க முடியாது
திமுக தலைமையிலான கூட்டணியை உடைக்க சதி நடப்பதாகவும், திமுக கூட்டணிக் கட்சிகளை யாராலும் எதுவும் செய்யமுடியாது என்றும், அது உடையாத உறுதியான கூட்டணி எனவும் முத்தரசன் நம்பிக்கை தெரிவித்தார். தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்பது யாருக்கும் தெரியாத புரியாத புதிராக உள்ளதாகவும், இது குறித்து இரண்டு பழனிசாமிக்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் முத்தரசன் விமர்சித்தார்.

அபாயம்
ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர் ராணுவப் பயிற்சி பள்ளி நடத்துவது அபாயகரமானது என்றும், முப்படைத் தளபதி அரசியல் பேசிய சூழலில் ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகள் அபாயகரமானதாக உள்ளது என முத்தரசன் தெரிவித்தார். மத்திய, மாநில அரசுகள் ஹைட்ரோ கார்பன் விவகாரத்தின் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தர வேண்டும் என்றும், இல்லையென்றால் அதற்குரிய விளைவுகளை அரசுகள் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications