கஞ்சா வைத்திருந்த நாம் தமிழர் வேட்பாளர்..கொத்தாக தூக்கிய போலீசார்..“முக்கிய” குற்றவாளியை நெருங்கினர்
புதுகோட்டை : புதுக்கோட்டை நகராட்சி 23வது வார்டு தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் மஜீத் என்பவரை கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கிய நிலையில் 4ஆம் தேதி நிறைவடைந்தது.
பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். பின்பு மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தற்போது தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

கண்காணிப்பு தீவிரம்
தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிரமாக களப்பணி ஆற்றி வரும் நிலையில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக தேர்தல் ஆணையமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், தங்கும் விடுதிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான நபர்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர்.

புதுக்கோட்டையில் சோதனை
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று இரவு புதுக்கோட்டையில் உள்ள தங்கும் விடுதிகளை சோதனை செய்த போது அதில் ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறையில் தங்கியிருந்தவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் செய்த விசாரணையில் புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததாக விசாரணையில் கூறியுள்ளார்

கஞ்சா பறிமுதல்
அவரை அழைத்துக்கொண்டு பெரியார் நகரில் உள்ள வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை செய்தபோது, அங்கு புதுக்கோட்டை நகராட்சியில் 23 வது வார்டில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் மஜீத் இருப்பது தெரியவந்தது. போலீசார் அவரது வீட்டை சோதனை செய்ததில் அங்கிருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் செய்த விசாரணையில் தனக்கு திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியில் இருந்து கஞ்சா சப்ளை வருவதாக கூறி காவல்துறைக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.

நாதாக வேட்பாளர் கைது
அதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் மஜீத் மற்றும் தனியார் விடுதியில் தங்கியிருந்த நபர் இருவரையும் அழைத்துக்கொண்டு தற்போது தனிப்படை போலீசார் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதிக்கு விரைந்துள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கஞ்சா வழக்கில் சிக்கி புதுக்கோட்டை நகர காவல் நிலைய போலீஸார் கைது செய்யப்பட்டிருப்பது புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications