"20 பேருக்கு சம்மன்" நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம்.. குற்றவாளிகளை நெருங்கிய போலீசார்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தின் குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்ய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர், ஒரு வாரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்ட நிலையில், கிராமத்தைச் சேர்ந்த 20 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்று காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் இறையூர் கிராமத்தில் உள்ள ஒரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட பட்டியலினத்து மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வந்த பகுதியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் துர்நாற்றத்துடன் குடிநீர் வந்ததை அறிந்த பொதுமக்கள், தொட்டியின் மேலே சென்று ஆய்வு மேற்கொண்ட போது அதில் மர்ம நபர்கள் மலம் கலந்திருப்பது தெரிய வந்தது.
குடிக்கும் தண்ணீரில் மலம்! பதறிப்போன புதுக்கோட்டை! மீண்டும் எப்படி தண்ணீர் குடிப்பது? அதிரடி முடிவு!
குடிநீர் தேக்க தொட்டியில் மலம்
இதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு சோதனை செய்தபோது மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக வெள்ளனுர் காவல் நிலையம் புகார் செய்யப்பட்டு ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தனர்.
கோயிலில் தீண்டாமை
அப்போது அப்பகுதியினர் அளித்த புகார் மூலமாக அய்யனார் கோவிலுக்கு பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படுவவில்லை என்பதும், தேநீர் கடையில் இரட்டை குவளை முறை பின்பற்றப்படுவதும் தெரியவந்தது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக பட்டியலின மக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபட செய்தார்.
தேநீர் கடை உரிமையாளர்கள் கைது
அப்போது சாமி வந்ததை போல் பட்டியலின மக்களை இழிவாக பேசிய சிங்கம்மாள் மற்றும் அஞ்சப்பன் ஆகியோர் மீது எஸ்சி/எஸ்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறையை கடைபிடித்த கடை உரிமையாளர் மூக்கையா மற்றும் மனைவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல் சிங்கம்மாள், மூக்கையா இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
11 பேர் குழு விசாரணை
இருப்பினும் இதுநாள் வரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்யவில்லை. இதனிடையே குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க திருச்சி சரக டிஐஜி தரப்பில் ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணா தலைமையில் 11 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டது. இந்த 11 பேர் கொண்ட குழுவினர், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சம்மந்தப்பட்ட கிராமத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
22 பேருக்கு சம்மன்
இந்த நிலையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணை மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் 20 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த 20 பேரும் மாலை 5 மணியளவில் 11 பேர் கொண்ட குழு முன் ஆஜராக தங்கள் தரப்பு விளக்கங்களை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின், அடுத்த ஓரிரு நாட்களில் குற்றவாளிகளை கைது செய்துவிடுவோம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.