நாளை நடக்க இருந்த ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுத்த கலெக்டர் கவிதா ராமு.. தச்சங்குறிச்சியில் பரபரப்பு!
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை நடக்க இருந்த ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, கடைசி நேரத்தில் அனுமதி தர மறுத்து விட்டதால் விழா கமிட்டியினர், இளைஞர்கள், அரசு அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு, காளைகள், மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் முன்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை முறையாக பின்பற்றாததால், ஜல்லிக்கட்டு போட்டியை வேறு தேதிக்கு மாற்றுமாறு கூறியுள்ளார்.
நாளை ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியர் திடீரென அனுமதி மறுத்ததால் அப்பகுதியினர் கடும் அதிருப்தி அடைந்து, அரசு அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தச்சங்குறிச்சி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் உள்ள அடைக்கல அன்னை ஆலயத்தில் புத்தாண்டையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஜனவரி 1ஆம் தேதி நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு, 2017க்குப் பிறகு ஜனவரி 2ஆம் தேதி நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிட்டு, ஜனவரி 6ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினர் மேற்கொண்டு வந்தனர்.

ஜல்லிக்கட்டு
தச்சங்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவும் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் நடைபெற உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தச்சங்குறிச்சியில் நாளை நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அனுமதி தர மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடைசி நேரத்தில்
ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது பின்பற்ற வேண்டிய உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை முறையாக பின்பற்றாததால், ஜல்லிக்கட்டு போட்டியை வேறு தேதிக்கு மாற்றுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, கிராம பிரமுகர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்து நாளை போட்டியை நடத்த தயாராகி வந்த நிலையில் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் விழா ஏற்பாட்டாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பேச்சுவார்த்தை
மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுத்ததால் அதிருப்தி அடைந்த விழா கமிட்டியினர், கிராம இளைஞர்கள் அரசு அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தச்சங்குறிச்சியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications