புதுக்கோட்டையில் பரிதாபம்: சாகசம் செய்யும் பொழுது உடலில் தீப்பற்றியதில் கராத்தே வீரர் உயிரிழப்பு!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கராத்தே வீரர் சாகசம் செய்யும் பொழுது உடலில் தீப்பற்றி எரிந்ததில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். புதுக்கோட்டை வடக்கு நான்காம் வீதி பகுதியில் அமைந்துள்ளது சிங்கமுத்து அய்யனார் கோவில்.
இதன் அருகே உள்ள மைதானத்தில் கடந்த 14-ம் தேதி கராத்தே வீரர்களுக்கான சாகச விழா நடைபெற்றது இதில் பல்வேறு தரப்பட்ட முக்கியஸ்தர்கள் அப்பகுதி பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சாகசத்தை கண்டுகளித்தனர்

அப்போது கராத்தே பிரிவில் பல்வேறு சாகசங்கள் நடைபெற்றன. இதில் 19 வயதுடைய பாலாஜி என்பவர் கைகளில் துணிகளை கட்டிக்கொண்டு அதில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டி சாகசம் செய்து காட்டி கொண்டிருந்தார். அப்போது திடீரென பலத்த காற்று வீசியது. காற்றின் வேகம் காரணமாக கைகளில் இருந்த தீயானது குபீரென மிகப்பெரிய அளவில் வெடித்து சிதறியது
இதனால் சாகச வீரர் பாலாஜி உடலில் தீப்பற்றியது. அவர் உடல் கருகி பலத்த படுகாயமடைந்தார் உடனடியாக அங்கு இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு சாகச வீரர் பாலாஜிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கராத்தே வீரர் பாலாஜி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மரணம் அடைந்த சாகச வீரர் பாலாஜி புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் வசித்து வந்தார். கராத்தே குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் பயிற்சி கொடுத்து வந்தார். மேலும் கராத்தே எவ்வாறு பழக வேண்டும் என்பது குறித்து யூடியூபிலும் வீடியோவும் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கராத்தே வீரர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை எற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications