சின்னவர் ஓகே.. ஆனால் மூன்றாம் கலைஞர் என்று எல்லாம் என்னை கூப்பிடாதீங்க! காரணத்தை விளக்கும் உதயநிதி
புதுக்கோட்டை: திமுக சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
Recommended Video
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி சென்றுள்ளார்,
அதன்படி நேற்று மாலை ஆலங்கு சாலையில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி, பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

திமுக நிகழ்ச்சி
புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் உள்ள தடிகொண்ட அய்யனார் திடலில் புதுக்கோட்டை வடக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99ஆவது பிறந்த நாள் விழா மற்றும் மறைந்த முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுகவின் முன்னோடி தொண்டர்கள் 1051 பேருக்குத் தலா பத்தாயிரம் விதம் ரூ. 1.5 கோடி மதிப்பிலான பொற்கிழி வழங்கப்பட்டது.

உதயநிதி
அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டீர்களா என்று தனது பேச்சைத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், "எனக்குப் பேசுவதைக் காட்டிலும் செயல்படுவது தான் ரொம்ப பிடிக்கும். எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும் கட்சிக்கு உழைத்த தொண்டர்களுக்கு உதவி செய்யும் நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர்கள் மூலம் ஏற்பாடு செய்துவிடுவேன்.

திமுக தொண்டர்கள்
திமுக கூட்டணி நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் வெற்றி பெற்றதற்குத் தலைவர் செய்த பிரச்சாரம் மட்டுமல்லாது.. கழகத்தின் மூத்த முன்னோடிகள் ஒவ்வொருவரின் உழைப்பும் அதில் உள்ளது. தேர்தலில் நாம் பெற்ற வெற்றிக்கு திமுகவின் அடிமட்ட தொண்டர்கள்தான் காரணம். நான் பெரியாரையோ அண்ணாவையோ நேரில் பார்த்ததில்லை.. கருணாநிதியைப் பார்த்து வளர்ந்து உள்ளேன், தற்பொழுது திமுகவின் தொண்டர்களிடம் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் மறு உருவத்தைப் பார்க்கிறேன்.

மூன்றாம் கலைஞர் வேண்டாம்
என் மீதான அன்பால் எனக்கு மரியாதை அளிக்க வேண்டும் என திமுகவினர் என்னை மூன்றாம் கலைஞர், சின்னவர் என்று எல்லாம் கூப்பிடுகிறார்கள். அவர்களுக்கு நான் வைக்கும் ஒரே ஒரு வேண்டுகோள்... உரிமையாகவே கூறுகிறேன், மூன்றாவது கலைஞர் இளம் தலைவர் என்றெல்லாம் என்னை அழைக்க வேண்டாம். அதில் எனக்குத் துளியும் உடன்பாடு இல்லை. கலைஞர் என்றால் அது கருணாநிதி மட்டுமே. எனவே, அப்படி எல்லாம் என்னைக் கூப்பிடக் கூடாது.

சின்னவர் ஓகே
சின்னவர் என்று வேண்டுமானால் கூப்பிடுங்கள். இது எனக்கு மகிழ்ச்சியைத் தான் ஏற்படுத்துகிறது. ஏனென்றால் என்னை விட அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் பலர் திமுகவில் உள்ளனர். எனவே, என்னைச் சின்னவர் என்று அழைப்பதில் எனக்கு மகிழ்ச்சி!

ராசியில் நம்பிக்கை இல்லை
விழா நடக்கும் இந்த இடத்திற்கு வந்தவர்கள் எல்லாம் பெரிய பதவியைப் பெற்று உள்ளதாகவும் அந்தளவுக்கு இது ராசியான இடம் என்றும் சொன்னார்கள். எனக்கு ராசியில் நம்பிக்கையில்லை உழைப்பில் தான் நம்பிக்கை உண்டு. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் திராவிட மாடல் பயிற்சிப் பட்டறை நடத்தி வருகிறோம். இதைச் சிலர் விமர்சிப்பதாக என்னிடம் கூறினர். அந்த சிலர் விமர்சித்தால் நாம் சரியான பாதையில் தான் செல்கிறோம் என அவர்களுக்குப் பதில் அளித்தேன்!" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications