திமுக அரசு செய்த சிறப்பு.. கலெக்டர் முதல் மொத்தபேரும் பெண்கள்.. அப்ளாஸை அள்ளும் மாவட்டம்
புதுக்கோட்டை: கலெக்டர் முதல் மாவட்ட கல்வி அலுவலர் வரை அனைத்து உயர் பதவியிலும் பெண்களே புதுக்கோட்டை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சி தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர், மருத்துவ கல்லூரி டீன், மாவட்ட கல்வி அலுவலர் வரை அனைவரும் பெண்கள் ஆவர். இதன் மூலம் புதுக்கோட்டை பெண்களின் கோட்டையாக மாறி உள்ளது,.
பெண்கள் கல்விக்கு எதிர்ப்பு இருந்த அந்த காலகட்டத்தில், வீட்டில் இருந்தபடியே படித்து தனித்தேர்வராக எழுதி மெட்ரிக் தேர்வில் தேறிய முத்துலட்சுமி இன்டர்மீடியட் படிக்க புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் சேர்ந்து படித்தார். 1912ல் அவர் மருத்துவர் ஆனார். இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி தான்.
இப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்து பெண்ணினத்துக்கு பெருமை சேர்த்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு பெரிய கௌரவம் இன்று உருவாகி உள்ளது. அவர் பிறந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து அரசுத்துறை உயர் பதவிகளிலும் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளார்கள். எதார்த்தமாக நடந்திருந்தாலும், உண்மையில் அற்புதமான விஷயம் ஆகும்.

இடமாற்றம்
தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே 7ம் தேதி பொறுப்பேற்றார். அதன்பின்னர் பல்வேறு மாவட்ட ஆட்சி தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள், பல்வேறு முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகள் என கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.

ஸ்டாலின் அரசு
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சி தலைவர்கள் மிக இளம் வயது அதிகாரிகள் ஆவர். இளம் படை கொண்டு நிர்வாகத்தை நடத்தி வரும் ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்கிய பதவிகளில் பெண் அதிகாரிகளை நியமித்துள்ளார். கலெக்டர் முதல் மாவட்ட கல்வி அலுவலர் வரை அனைத்து உயர் பதவியிலும் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

கவிதா ராமு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கலெக்டராக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் கவிதா ராமு நியமிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக பணியாற்றிய நிஷா பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக இருந்த பாலாஜி சரவணன், சென்னைக்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

வருவாய் கோட்டாட்சியர்
புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக நாகையில் பயிற்சி கலெக்டராக உள்ள அபிநயா நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக இதுவரை பணியாற்றி வந்த டெய்சி குமார், கடலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முத்து லட்சுமி ரெட்டி
புதுக்கோட்டை நகர டி.எஸ்.பியாக லில்லி கிரேஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல் கூடுதல் எஸ்.பியாக கீதாவும் நியமிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக பூவதியும், சுகாதாரத்துறை துணை இயக்குநராக கலைவாணியும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக விஜயலட்சுமியும் பணியாற்றி வருகிறார்கள். புதுக்கோட்டை மண்ணில் தலைமை பொறுப்பேற்றுப்பில் அனைவரும் பெண்கள் என்பது சமூக சீர்திருத்த போராளி முத்துலட்சுமி ரெட்டிக்கு பெருமை சேர்க்கும் விஷயம் ஆகும்.












Click it and Unblock the Notifications