அதிமுக எம்.எல்.ஏக்கள் சதன் பிரபாகர், குமரகுருவுக்கு கொரோனா- நலம் விசாரித்தார் முதல்வர்
சென்னை: உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ. குமரகுருவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதி உச்சமாக இருந்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிராவை தொடர்ந்து தமிழகம், டெல்லியில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.
திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் அக்கட்சியின் 3 எம்.எல்.ஏக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமைச்சர் அன்பழகன்
இதேபோல் அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை அறிவித்தது. அதிமுகவின் ஶ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ .பழனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா உறுதியானது. அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிமுக எம்.எல்.ஏ. சதன் பிரபாகரன்
இந்நிலையில் அதிமுகவின் பரமக்குடி தொகுதி எம்.எல்.ஏ . சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சதன் பிரபாகரனின் நண்பர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் அவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் சதன் பிரபாகரனுக்கு கொரோனா உறுதியானது. அவரது மனைவி, மகன் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதும் உறுதியானது. தற்போது அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. குமரகுரு
இதனிடையே உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ. குமரகுருவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே துணை ஆட்சியர்,மாவட்ட வருவாய் அலுவலர்,மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் திமு.க எம்.எல்.ஏ உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்பு
தற்போது அதிமுகவின் எம்ம்.எல்.ஏ. குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. எம்.எல்.ஏ குமரகுரு, கடந்த 4 தினங்களுக்கு முன்னர் பகண்டை கூட்டுரோட்டில் கால்நடை மருத்துவக்கல்லூரியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்த நிகழ்வில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல்வர் நலம் விசாரித்தார்
இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சதன் பிரபாகரன் மற்றும் குமரகுரு இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருவரது உடல்நிலை குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.












Click it and Unblock the Notifications