கோட்சே தீவிரவாதினு சொல்றீங்க! அப்ப அந்த ‘----’ யாரு! காங்கிரஸ் கட்சியினரின் அனல் தெறிக்கும் போஸ்டர்!
ராமநாதபுரம் : முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்த மே 18ஆம் தேதி இந்திய நீதிக்கு கருப்பு நாள் எனவும், மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே தீவிரவாதி என்றால் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி திட்டமிட்டு படுகொலை செய்த நபர் யார் என காங்கிரஸ் கட்சியினர் வைத்துள்ள பிளக்ஸ் பேனர்களால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை தமிழகத்திலுள்ள பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
விடுதலை தீர்ப்பு வெளியானதும் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பேரறிவாளன். மேலும், தனது விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிபத்து.. கரும்புகை, வெடித்து சிதறிய சிலிண்டர்!
பேரறிவாளன் விடுதலை
இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம்தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்ததாகவும், அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருப்பதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
திமுக கூட்டணி
அதே நேரத்தில் இன்று நடைபெற்ற ராஜீவ்காந்தி நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, திமுகவுடன் கூட்டணி வேறு, கொள்கை வேறு. அவர்கள் கொள்கையை அவர்கள் சொல்கிறார்கள், எங்கள் கொள்கையை நாங்கள் சொல்கிறோம், ஆகையால் இதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார். இதனை கண்டித்து பல காங்கிரஸ் பிரமுகர்கள் தலைமைக்கு எதிராக பேசி வரும் நிலையில், சிலர் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.
ப்ளக்ஸ் பேனர்
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் வைத்துள்ள பிளக்ஸ் பேனரால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. பேரறிவாளன் விடுதலையை கண்டித்து வைக்கப்பட்டுள்ள அந்த பேனரில், " பேரறிவாளனின் விடுதலையான நாள் இந்திய நீதிக்கு கருப்பு தின நாள் என்றும், நெஞ்சம் பொறுக்குதில்லையே தலைவா உன் இழப்பு" என கூறியுள்ளனர்.
பெரும் பரபரப்பு
மேலும், " தமிழக அரசே எங்கள் கேள்வி என்னவென்றால், தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே தீவிரவாதி என்றால், பாரத பிரதமர் ராஜீவ் காந்தியை திட்டமிட்டு படுகொலை செய்த நபர் யார்? " என்பன போன்ற வசனங்கள் உள்ள பேனரில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, கேஎஸ் அழகிரி ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன. சமூக வலைதளங்களில் இந்த பேனர் வேகமாக பரவி வரும் நிலையில், ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.