காரட் சாம்பார் ஓகே.. கரப்பான்பூச்சி சாம்பார்னா எப்படி? தொல்லை பவனான 'நெல்லை பவன்'! ராமேஸ்வரம் ஷாக்!
இராமநாதபுரம் : ராமேஸ்வரம் திருக்கோயில் அருகே உள்ள உணவகத்தில் வாடிக்கையாளருக்கு பரிமாறிய சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 3 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
Recommended Video
வார விடுமுறை மற்றும் ஆடி திருவிழாவையொட்டி தமிழகத்ததின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை கும்பகோணத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
'நெல்லை பவன்'
பின்னர் திருக்கோவில் வடக்கு கோபுர வாசல் எதிரே அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான 'நெல்லை பவன்' என்ற உணவகத்தில் காலை உணவு சாப்பிட்டு உள்ளனர். அப்போது அவர்களுக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடந்துள்ளது. இதேபோல் அந்த உணவகத்தில் இன்னும் சில கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உணவருந்திக் கொண்டிருந்த போது அவர்கள் உணவு தட்டில் கரப்பான்பூச்சி கிடந்துள்ளது.
கரப்பான் பூச்சி
இது குறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர் கேட்கும்போது அவர் பொறுப்பற்ற முறையில் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உணவருந்திய வாடிக்கையாளர்கள் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயகுமார் உத்தரவின் பெயரில் ராமேஸ்வரம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜெயராஜ் சம்பந்தப்பட்ட உணவகத்தை முழுமையாக ஆய்வு செய்தார்.
3,000 ரூபாய் அபராதம்
அப்போது சமையலறையில் கரப்பான் பூச்சிகள் அதிகமாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அந்த உணவகத்திற்கு 3,000 ரூபாய் அபராதம் விதித்த உணவு பாதுகாப்பு அதிகாரி உத்தரவிட்டதுடன் வரும் ஏழு நாட்களுக்குள் சமையலறையை முறையாக பராமரிக்க வேண்டும் தவறும் பட்சத்தில் மீண்டும் ஆய்வு செய்து உணவகத்துக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்து நோட்டீஸ் வழங்கினர்.
பக்தர்கள் அதிர்ச்சி
மேலும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தை சுற்றி உள்ள உணவகங்கள் மற்றும் ராமேஸ்வரம் தீவில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இன்று வார விடுமுறை மற்றும் ஆடித் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்திருந்த நிலையில் பக்தர்கள் சாப்பிட்ட சாம்பாரில் கரப்பான்பூச்சி கிடந்த தகவல் பரவியதையடுத்து பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.