நடுக்கடலில் அட்டூழியம்.. இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி ராமேஸ்வரம் மீனவர் பலி.. 2 பேர் மாயம்!
ராமநாதபுரம்: இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகு கடலில் மூழ்கியது. கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில், படகு கவிழ்ந்து ஒருவர் பலியாகியுள்ளார். படகில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 2 பேர் தற்போது வரை கரை திரும்பாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக தொல்லைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து கடந்த ஜூன் 15 முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்த ஒன்றரை மாதத்தில் 10 விசைப்படகுகள், 4 நாட்டுப் படகுகள் என மொத்தம் 14 படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 83 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

83 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது, ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகை, இலங்கை கடற்படை ரோந்து கப்பலில் வந்தவர்கள் மோதி கவிழ்த்ததாக கூறப்படுகிறது.
ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர் கார்த்திகேயன். இவருக்கு சொந்தமான விசைப்படகில், நேற்று 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மொத்தமாக 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், கார்த்திகேயனின் படகில் ராமச்சந்திரன் உட்பட 4 பேர் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் அனைவரும் சர்வதேச கடல் எல்லைக்கு அருகில், நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து படகு, மீனவர்களின் விசைப்படகின் மீது மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் தமிழக மீனவர்களின் படகு சேதமடைந்து, நீரில் மூழ்கி உள்ளது. அதில் இருந்த 4 மீனவர்களையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விசைப்படகின் உரிமையாளர் காத்திகேயன், மீன்வளத்துறை அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற அதிகாரிகள் இலங்கை கடற்படைக்கு தொடர்பு கொண்டபோது, சரிவர பதில் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது மீனவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், படகு கவிழ்ந்ததில் ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் உயிரிழந்ததாக இலங்கை கடற்படை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 2 மீனவர்கள் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.
மாயமான மீனவர்களின் குடும்பத்தினர், தனுஷ்கோடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த மீனவரின் விவரங்களை தெரிவிப்பதோடு, மாயமான மீனவர்களை மீட்டுத் தரவேண்டும் என்றும் ராமேஸ்வரம் மீனவ மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications