ராமேஸ்வரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை..பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவு
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவில் பிரகாரத்தில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
மழை பெய்யும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை காலம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டாலும் பல ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்தில், இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜில்லென்று விடிந்த காலை பொழுது.. பல ஊர்களில் மழை.. புதுக்கோட்டை, பள்ளி கல்லூரிகளுக்கு லீவு
இடி மின்னலுடன் கூடிய மழை
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மழை
மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் கோவிலுக்குள் வெள்ள நீர்
ராமேஸ்வரத்தில் நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் முதல் பிரகாரத்தில் மழை வெள்ளம் புகுந்தது. கோவிலில் அமைந்துள்ள வடிகால்களில் மழை வெள்ளம் அதிக அளவில் பெருக்கெடுத்து வந்ததால் அந்த தண்ணீர் வெளியேறி முதல் பிரகாரத்தில் தேங்கியது. குளம் போல் தண்ணீர் தேங்கி இருந்ததால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
கொட்டித்தீர்த்த கனமழை
2 மணி நேரத்திற்கு பிறகு மழைநீர் அகற்றப்பட்டது. அதன் பின்னர் பக்தர்கள் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்தனர். இந்த மழை வெள்ளம் காரணமாக முதல் பிரகாரத்தில் உள்ள சிவசக்தி சன்னதியில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ராமேசுவரத்தில் நேற்று மட்டும் 73 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
கடல் மட்டத்தைவிட கோவில் தாழ்வாக அமைந்துள்ளதால் மழைநீர் வெளியேற முடியாமல் கோவில் வளாகத்தில் தேங்கியதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடிய பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர் முடிவெடுக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து அறிவித்துள்ளார்.