சசிகலா புஷ்பா நியூஸ்.. “அறுத்துருவேன்”! பத்திரிகையாளருக்கு பாஜக மாவட்ட தலைவர் “கொலை” மிரட்டல்
ராமநாதபுரம்: தனக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாவட்டத் தலைவர் மற்றும் நிர்வாகி மீது வார இதழ் செய்தியாளர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ள நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டு இருக்கிறது.
ராமநாதபுரத்தில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்வில் மாவட்ட பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி, அக்கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பாவிடம் தகாத முறையில் நடந்துகொண்ட வீடியோ வெளியானது.
இந்த செய்தியை தனியார் வார இதழில் வெளியிட்டதற்காக ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் கதிரவன் மற்றும் நிர்வாகி பாலா ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி கேணிக்கரை காவல்நிலையத்தில் விவேக்ராஜ் என்ற பத்திரிகையாளர் புகார் அளித்து உள்ளார்.

போலீசில் புகார்
இது குறித்து அவர் காவல் ஆய்வாளருக்கு எழுதியுள்ள புகார் கடிதத்தில், "எனது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம். வார இதழில் ராமநாதபுரம் மாவட்டச் செய்தியாளராக தற்போது பணியாற்றி வருகிறேன். கடந்த 27/09/2022 அன்று, மாலை 7.00 மணியளவில் கேணிக்கரை காவல் சரகத்துக்கு உட்பட்ட திருவள்ளுவர் சாலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, முன்னாள் எம்.பி-யான சசிகலா புஷ்பா ஆகியோர் கலந்துகொண்ட நிகழ்வுக்கு செய்தி சேகரிப்பதற்காகச் சென்றிருந்தேன்.

சசிகலா புஷ்பா செய்தி
அதற்காக அக்கட்சியின் கவுன்சிலர் குமார் என்பவர் வீட்டின் முன்பாக நின்றிருந்தேன். அப்போது அங்கு வந்த ராமநாதபுரம் மாவட்ட பாரதிய ஜனதர் கட்சியின் தலைவர் கதிரவன், சில வாரங்களுக்கு முன்பு பொன் பாலகணபதி மற்றும் சசிகலா புஷ்பா தொடர்பாக வார இதழில் நான் எழுதியிருந்த செய்தி ஒன்றைச் சுட்டிக்காட்டி 'உன் இஷ்டத்துக்கு செய்தி போடுவியா? அந்தச் செய்தியை போடறதுக்கு தரணி முருகேசனிடம் எவ்வளவு பணம் வாங்கினாய்? வெள்ளை வேட்டி சட்டை போட்டுருக்கான்.. அமைதியா போய்டுவான்னு நெனச்சியா? கொன்னுடுவேன்!

கொலை மிரட்டல்
என் போஸ்டிங் போய்ருச்சுனா உன்னை அறுத்துபோட்டுருவேன், கைய கால உடச்சுடுவேன். வெளியூர்ல இருந்து வந்து எங்கள் பத்தி நியூஸ் போடுவியா? என்றெல்லாம் அரசியல்வாதிகள் மற்றும் போலீசார் முன்னிலையிலையே பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். உடன் இருந்த வழக்கறிஞர் சண்முகநாதனிடம், 'இவன் மேல ஒரு கிரிமினல் கேஸ் போடு' என்றும் வற்புறுத்தினார். அப்போது அவருடன் இருந்த பாலா என்ற இளைஞர் 'தனியாதான் இருக்கான் பாத்துக்கலாம்' என என்னைப் பார்த்து மிரட்டியபடியே சொன்னார்.

உயிருக்கு ஆபத்து
ஒரு பத்திரிகையாளராக என்னுடைய கடமையை நான் செய்துகொண்டிருக்கும் குழவில் அதை வைத்து இப்படி இவர்கள் மிரட்டல் விடுப்பது என் உயிருக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மேற்படி பாஜக மாவட்ட தலைவர் கதிரவன் மற்றும் பாலா ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து என்னுடைய பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

பத்திரிகையாளர் சங்கம்
இந்த கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம், "செய்தி வெளியிட்டதற்காக, ராமநாதபுரம் மாவட்ட வார இதழ் செய்தியாளர் விவேக்ராஜாவுக்கு, பாஜக மாவட்ட தலைவர் கதிரவன், நிர்வாகி பாலா கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். வன்மையான கண்டனங்கள். காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்." என்றூ கேட்டுக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications