காசி தமிழ் சங்கமம்..ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட ரயில்..கங்கையில் நீராட கிளம்பிய பயணிகள்
ராமேஸ்வரம்: காசிக்கும் தமிழுக்கும் இருக்கும் பழமையான நாகரீக தொடர்பை உணர்த்தும் வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இந்த காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து வாரணாசிக்கு ரயில் மூலம் பயணிகள் கிளம்பி சென்றனர்.
இந்தியாவின் 75 வது சுதந்திர ஆண்டை மத்திய அரசு அமிர்த பெருவிழாவாக கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவித்தது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி இணைந்து நடத்தும் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
காசி தமிழ் சங்கமம்
காசிக்கும்-தமிழகத்திற்கும் உள்ள பழங்கால தொடர்புகளை மீட்டெடுக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியானது நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சி டிசம்பர் 19ஆம் தேதி வரை காசியில் நடைபெறுகின்றது. இலக்கியம், பழங்கால நூல்கள் ஆன்மிகம், இசை, நடனம், கைத்தறி மற்றும் நவீன கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு அம்சங்களை பற்றிய கருத்தரங்குகள், விவாதங்கள் நடக்கின்றன.
தமிழக கலாச்சார விழா
தமிழக கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், சிலம்பாட்டம், காவடி, கரகம், பட்டிமன்றம், நாட்டுப்புற நடனங்கள் பொய்க்கால் குதிரை போன்றவைகளும் அரங்கேற்றமாக நடக்கின்றன. காசியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் செல்ல வசதிக்காக நவம்பர் 16,23,30, மற்றும் டிசம்பர் 7 மற்றும் 14 ஆகிய நாட்களில் ராமேசுவரத்தில் இருந்து காசி பனாரஸ் விரைவு ரயில் மூன்று குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டி வசதி இணைக்கப்படுவதாகவும் ரயில்வே துறையால் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ராமேஸ்வரத்தில் இருந்து முதல் ரயில்
அதன் ஒரு பகுதியாக முதல் ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று புறப்பட்டு சென்றது. இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சிறப்பு ரயில்களில் 2,592 பேர் பயணம் மேற்கொள்ள உள்ளனர். அந்த வகையில் நேற்று தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் இருந்து வாரணாசிக்கு ரயில் மூலம் முதல் குழு புறப்பட்டு சென்றது. முதல் நாள் வாரணாசிக்கு ரயிலில் செல்லும் குழுவில் 216 பேர் இடம்பெற்று உள்ளனர். அவர்களில் 103 பேர் திருச்சியில் இருந்தும், 78 பேர் சென்னையில் இருந்தும், 35 பேர் ராமேஸ்வரத்தில் இருந்தும் வாரணாசிக்கு காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டு சென்றனர்.
பாஜகவினர் வழியனுப்பி வைத்தனர்
ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரயிலை பாஜகவினர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கட்சியின் மாவட்ட தலைவர் கதிரவன்,மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சண்முகநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் முரளிதரன், ஜி.பி.எஸ் நாகேந்திரன், தரணி முருகேசன், மாவட்ட பொதுச்செயலாளர் பவர் நாகேந்திரன், நகர் தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி துவக்கி வைப்பு
காசியில் வரும் 19 ஆம் தேதி வாரணாசி லோக்சபா தொகுதி உறுப்பினரான பிரதமர் நரேந்திர மோடி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வரும் இந்த நிகழ்வின் அமைப்பாளராக பாரதிய பாஷா சமிதி தலைவர் பத்மஸ்ரீ சாமுகிருஷ்ண சாஸ்திரி நியமிக்கப்பட்டு உள்ளார்.