அடுத்த கொடுமை.. பள்ளி மாணவிகளை தொட்டு தொட்டு பேசிய ஹெச்.எம்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில் காவல்துறை தற்போது தன்னுடைய சாட்டையை சுழற்றி இருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுற்றுப்புறத்திலிருக்கும் கிராமத்திலிருந்து சுமார் 43 மாணவிகள் மற்றும் 39 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருநெல்வேலியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார்.
ஆனால் இவர் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் மேலெழுந்து வந்திருக்கிறது. அதாவது இவர் மாணவிகளை அடிக்கடி தன்னுடைய அறைக்கு தனியாக அழைத்து பேசுவது, பாடங்களை தவிர்த்து மற்ற விஷயங்களை பேசுவது, தொட்டு பேசுவது என மாணவிகளிடத்தில் அத்துமீறியிருக்கிறார். இவரின் நோக்கத்தை தொடக்கத்தில் புரிந்துகொள்ளாத மாணவிகள் பெரியதாக எதுவும் நினைத்துக்கொள்ளவில்லை. ஆனால் இது அடுத்தடுத்த நாட்களில் மேலும் அதிகரிக்கவே அவர்கள் பெற்றோர்களிடத்தில் புகார் அளித்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டம்.. கடலில் இறங்கக் கூடாது! மது அருந்த கூடாது! தமிழக காவல்துறை ஸ்ட்ரிக்ட்
தலைமையாசிரியர்
இந்த பிரச்னை குறித்து சில பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் சென்று தலைமையாசிரியரிடம் நியாயம் கேட்டிருக்கின்றனர். ஆனால் தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் இது குறித்து முறையாக பதில் அளிக்காமல் பிரச்னையிலிருந்து நழுவிச் செல்ல முயன்றிருக்கிறார். இதற்கு பள்ளியின் ஆங்கில ஆசிரியரும் துணை போயுள்ளார். இந்த சம்பவத்திற்கு பின்னர் சில நாட்கள் பிரச்னை ஏதும் இல்லாமல் இருந்திருக்கிறது. ஆனால் சில நாட்கள் கழித்து ரவிச்சந்திரன் மீண்டும் தன்னுடைய சில்மிஷத்தை தொடங்கி இருக்கிறார். எனவே மீண்டும் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
புகார்
இந்த முறை பெற்றோர் பள்ளிக்கு சென்று சண்டையிடாமல் முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேசு பொருளானதை தெரிந்துகொண்ட ரவிச்சந்திரன் மீண்டும் எந்த சில்மிஷத்திலும் ஈடுபடாமல் அமைதியாக இருந்திருக்கிறார். முன்னர் நடந்ததைப் போலவே இப்போதும் கொஞ்ச நாள் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் தனது ஆட்டத்தை ரவிச்சந்திரன் தொடங்கி இருந்துள்ளார். இது கிராம மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியரிடத்தில் புகார்
எனவே கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், ஏற்கெனவே முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்திருந்தோம் என்றும், ஆனால் அந்த புகாரின் பெயரில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் எங்களது குழந்தைகள் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுகின்றனர் எனவும் குற்றம்சாட்டியிருந்தனர். புகாரை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க உடனடியாக ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் உத்தரவிட்டார்.
காவல்துறை
உத்தரவின் பேரில் குழு அமைக்கப்பட்டு விசாரணையை தொடங்கி வந்த நிலையில், விசாரணைக்கு வரும் அதிகாரிகளிடம் மாணவிகள் எந்த தகவலையும் சொல்லக்கூடாது என்று பள்ளியின் ஆங்கில ஆசிரியர் மாணவிகளை தனியாக அழைத்து மிரட்டியுள்ளார். இது விசாரணை அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டியுள்ளது. இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் ஆங்கில ஆசிரியர் என இருவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த ஆங்கில ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது ராமநாதபுரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.