சாதி தமிழில்ல.. “குடி”ன்னு சொல்லுங்க! இடஒதுக்கீடு வேண்டாம்.. புதிய பெயரை சொல்லிய சீமான்
ராமநாதபுரம்: சாதியை ஒழிக்க குடிவாரி கணக்கெடுப்பை நடத்திட வேண்டும் என்றும், இடஒதுக்கீடு என்று ஓரத்திற்கு ஒதுக்கப்பட்டது போதும் என்றும், இடப்பகிர்வுதான் சரியான தேவை எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
ராமநாதபுரம் முதுகுளத்தூரில் பேசிய அவர், "தமிழர்கள் எப்போதும் இனப்பெருமை மட்டுமே பேசிக்கொண்டு இருப்பார்கள் என்று திராவிடர்கள் நம்மைத் தீண்டத்தகாதவர்கள் போலப் பார்ப்பார்கள். நாங்கள் இனப்பெருமை பேசுவது பீற்றிக்கொள்ள அல்ல, எங்களை நாங்களே தேற்றிக்கொள்ள என்பதை என் அன்புத்தம்பி - தங்கைகள் நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும்.
இடஒதுக்கீட்டை எடுத்துக் கொடுக்காதீர்கள், குடிகளை எண்ணிக் கொடுங்கள். அள்ளிக் கொடுக்காதீர்கள், அளந்து கொடுங்கள். நாங்கள் கேட்பது இடஒதுக்கீடு அல்ல, இடப்பங்கீடு. ஒதுக்கீடு ஒதுக்கீடு என்று நாங்கள் ஓரத்திற்கே ஒதுக்கப்பட்டது போதும், இனி எங்களுக்குத் தேவை சரியான இடப்பகிர்வு தான்.
பரந்தூர் விமான நிலையம் - மக்களை அச்சுறுத்தி அடக்குவது அரச பயங்கரவாதம்... சீமான் கடும் கொந்தளிப்பு
எது சமூக நீதி?
ஒரு நாட்டில், அந்த நாட்டின் குடிமக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம், அந்த நாட்டின் வளங்கள் எல்லாம் சமவிகிதத்தில், அந்த நாட்டு குடிகளின் எண்ணிக்கை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அது தான் சமூக நீதி. தமிழ்நாட்டில் அவ்வாறு உள்ளதா? குடிகளின் எண்ணிக்கைக்கேற்ப அதை அளந்து கொடுக்காமல் இருந்தால், அது அநீதி. அதில் எண்ணிக்கைக் குறைவாக இருப்பவன் அதிகமாக எடுத்துக் கொண்டால் அது ஆதிக்கம்.
அடிமையாக வாழ்கிறீர்கள்
அதுவே எண்ணிக்கையில் அதிகமாக இருப்பவன் குறைவாகப் பெற்றால் அது அடிமைத்தனம். இன்று நீங்கள் உங்கள் எண்ணிக்கையை விடக் குறைவாகப் பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றீர்கள். அப்படியென்றால், எத்தனை ஆண்டு காலமாக நீங்கள் அடிமையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றீகள் என்பதை நீங்களே ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்.
உயர்சாதி வகுப்பினர்
2008 இன் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய ஒன்றிய அரசின் பணிகளிலே 17.5 விழுக்காடு (பிராமணர், நாயர், நம்பூதரி, தாகூர், அகர்வால், முகர்ஜீ, மற்றும் பல) உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த மக்கள் பெற்ற இடஒதுக்கீடு என்பது 77.2 விழுக்காடு. அவர்களின் மக்கள் தொகையைவிட அவர்கள் கூடுதலாக அனுபவிக்கும் இடஒதுக்கீடு என்பது 59.7 விழுக்காடு ஆகும். எண்ணிக்கையில் குறைவாக இருப்பவன் அதிகமாக அனுபவிப்பதற்குப் பெயர் தான் ஆதிக்கம்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள்
தாழ்த்தப்பட்ட பட்டியல் சமூக பழங்குடி மக்களின் எண்ணிக்கை 25.5 விழுக்காடு. ஆனால், அவர்கள் அனுபவிப்பது வெறும் 17.4 விழுக்காடு இடஒதுக்கீடு தான். அவர்கள் எண்ணிக்கையை விட 8.1 விழுக்காடு இடஒதுக்கீடு குறைவு. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 57 விழுக்காடு. ஆனால், நாம் அனுபவிக்கும் இடஒதுக்கீடு என்பது வெறும் 5.4 விழுக்காடு தான். 51.6 விழுக்காடு உரிமையை நாம் இழக்கின்றோம். எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் நாம் குறைவான வாய்ப்பைப் பெறுவதற்குப் பெயர் தான் அடிமைத்தனம்.
பொருளாதார இடஒதுக்கீடு
இப்போது இந்த பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்று வருகிறபோது, 59.7% லிருந்து 69.7% ற்கு இடஒதுக்கீடு உயரும், நமக்கு 51.6% இடஒதுக்கீடு 41.6% ஆக குறையும். இது தான் நாம் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை எதிர்ப்பதற்கு காரணம். இந்தக் கொடுமையிலிருந்து, பல ஆண்டுகளாக நாம் அடிமைப்பட்டிருக்கும் நிலையில் இருந்து விடுதலைப் பெற வேண்டும் என்பதனால் தான் குடிவாரி கணக்கெடுப்பை நடத்தி குடிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இடப்பங்கீடு கொடுக்க வலியுறுத்துகிறோம்.
ஏன் குடி என்கிறோம்?
சாதி ஒழிப்பு பேசும் சீமான் ஏன் குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோருகிறார் என்று கேட்கின்றார்கள். சாதி என்பது தமிழில்லை, தமிழனுக்கு சாதியில்லை என்கிறார் புரட்சிப் பாவலர் பாரதிதாசன். சாதி என்பது சமஸ்கிருத சொல். குடி என்பது தான் தமிழ்ச்சொல். அதனால், குடிவாரி கணக்கெடுப்பு என்று நாங்கள் கூறுகிறோம். குடிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் தான் சாதி வளரும் என்கிறார்கள். நாங்கள் குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோருவதே சாதி ஒழிப்பிற்குத் தான்.
பீகாரில் குடிவாரி கணக்கெடுப்பு
சமூகநீதியே பேசாத பீகாரில் குடிவாரி கணக்கெடுப்பு நடத்துகிறார் அம்மாநில முதல்வர். காரணம் அவர் அந்த மண்ணின் மகன், அந்த மண்ணிற்கு அவர் உண்மையாக இருக்கின்றார். இது பெரியார் மண், அண்ணா மண் என்று சமூக நீதி பேசும் பெருமக்கள் நீங்கள் இந்த குடிவாரி கணக்கெடுப்பை நடத்துவத்தில் என்ன சிக்கல்? இங்கு இசுலாமியர்களுக்கு 3.5% இடஒதுக்கீடும், அருந்ததியர்களுக்கு 3% இடஒதுக்கீடும் கொடுக்கப்படுகிறது.
ஒரு தலைவன்கூட இல்லை
முதலில் இசுலாமிய மக்களின் எண்ணிக்கையும், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் எண்ணிக்கையும் ஒன்றா? அதிலும் அருந்ததியர்களுக்குக் கொடுக்கப்படும் 3% இடஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்ட பட்டியல் சமூக மக்களின் இடஒதுக்கீட்டிலிருந்து கொடுக்கும் உள்இடஒதுக்கீடு. அதை ஏன் இவர்கள் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டிலிருந்து எடுத்துக் கொடுக்கவில்லை? ஏனென்றால், பட்டியல் சமூக மக்களின் உரிமைகள் பறிபோவதை எதிர்த்துக் கேள்விக் கேட்க இந்த நிலத்தில் ஒரு தலைவன் இல்லை.
அருந்ததியர்களுக்கு இடம் வேண்டும்
நாம் யாரின் இடஒதுக்கீட்டிற்கும் எதிரானவர்கள் அல்ல. விளிம்பு நிலை மக்களான அருந்ததியர்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. ஆனால், அது அந்தந்த சமூக மக்களின் எண்ணிக்கைக்கேற்ப கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.
எது முன்னேற்றம்?
பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்று வரும்போது தான், அதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. வகுப்பின் அடிப்படையில், சாதியை வைத்து ஒருவர் முன்னேறியவர் என்றால், பிறகு அவருக்கு எதற்கு இடஒதுக்கீடு? சாதி எப்படி ஒருவரை முன்னேற்றும்? ஒருவர் நல்ல கல்வியைப் பெற்று, வேலையைப் பெற்று, அதற்கேற்ப பொருளாதாரத்தைப் பெற்று வாழ்வில் மேம்படுவதற்குப் பெயர் தான் முன்னேற்றம்.
அனைத்து சமூகங்களுக்கான இடப்பங்கீடு
பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர் என்றால், அவரைப் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வைத்து இடஒதுக்கீடு வழங்குவது தான் சரியான சமூகநீதி. அவரை சாதியின் அடிப்படையில் முன்னேறிய வகுப்பிலே வைத்து இடஒதுக்கீடு வழங்கினால் அது உண்மையான சமூகநீதி அல்ல. அதனால், குடிவாரி கணக்கெடுப்பை நடத்தும்போது அனைத்து சமூகங்களுக்கான இடப்பங்கீடு முழுமையாகக் கிடைத்துவிடும். சாதிச் சங்கங்களின் அவசியமே இல்லாமல் போய்விடும். அதுவே சாதி ஒழிப்பிற்கு உதவும்.
மண்ணின் மைந்தர்கள்
நமக்குரிய இடத்தை நாம் போராடித் தான் பெற்றாக வேண்டும். இல்லையென்றால் நாம் முற்றுமுழுதாக வஞ்சித்து வீழ்த்தப்படுவோம். ஒருவேளை நீங்கள் குடிவாரி கணக்கெடுப்பை எடுக்க தொடர்ந்து மறுப்பீர்களேயானால், நாங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றி அதை நடத்தியே தீருவோம். ஏனென்றால், நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். இங்கு வாழும் மக்களுக்கு மட்டுமல்லாது அனைத்து உயிர்களுக்குமான அரசியல் செய்ய வந்தவர்கள்." என்றார்.