டாக்டர் அப்துல்கலாமின் 7-ம் ஆண்டு நினைவு தினம்! நினைவிடத்தில் உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி!
இராமநாதபுரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாமின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் உறவினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
Recommended Video
இந்தியாவின் தென் கோடியில் உள்ள ராமேசுவரத்தில் பிறந்து, உலகின் அனைத்து மூலைகளிலும் நம் நாட்டின் பெயரை மிளிரச் செய்தவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஆவார். இந்தியாவின் பாதுகாப்பு துறையில் பணியாற்றி அணுகுண்டு சோதனை, செயற்கைகோள் வடிவமைத்தல், அக்னி ஏவுகணை உருவாக்குவதில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். மாணவர்களின் எழுச்சி நாயகனாகவும், இளைஞர்களின் கனவு நாயகனாகவும், இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதை குறிக்கோளாக கொண்டு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தினார். 'கனவு காணுங்கள், உங்கள் கனவு மட்டும் தான் உங்கள் லட்சியங்களை அடைவதற்கானப் பாதையை வகுக்கும்' என்று கூறி இளைய தலைமுறையினருக்கு ஊக்கமளித்தவர் டாக்டர் அப்துல் கலாம்.
ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் டாக்டர் அப்துல் கலாம், கடந்த 2002 முதல் 2007 வரை இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார். 'மக்கள் குடியரசுத் தலைவர்' என்ற பெயரோடு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமுக்கு, நம் நாட்டின் வரலாற்றில் தனிச்சிறப்புண்டு.
2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடும்போது டாக்டர் அப்துல் கலாமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில், மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவில் ராமேஸ்வரம் பேக்கரும்பில் நினைவிடம் அமைத்தது. அந்த நினைவிடத்தில் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்து வாசகங்கள் அமைக்கப்பட்டும், அவர் பயன்படுத்திய உடைமைகளும் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அப்துல் கலாமின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் கலாமின் குடும்பத்தினர் ஜெய்னுலாபுதீன், நசீமா மறைக்காயர், பேரன்கள் ஷேக் தாவுது, ஷேக் சலீம் உள்ளிட்ட குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவரை நினைத்து பிராத்தனை செய்து மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இஸ்லாமிய முறைப்படி பாத்திகா ஓதப்பட்டது. டாக்டர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு, கலாமை நினைவு கூறும் வகையில் ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.