கணவருடன் அடிக்கடி சண்டை.. மனவேதனை.. 8 மாத கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு.. ஆத்தூரில் சோகம்!
சேலம்: சேலம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் 8 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி ரங்கன் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (33).
இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சோலையம்மாள் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ரிதன்யா என்ற இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சோலையம்மாள் மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். 8 மாத கர்ப்பிணியான சோலையம்மாலுக்கும் பிரபாகரனுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அடிக்கடி தகராறு
இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு சண்டையாக மாறியது. இதனால் விரக்தி அடைந்த சோலையம்மாள் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்று உள்ளார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பரிதாபமாக உயிரிழந்தார்
அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது சோலையம்மாள் வயிற்றில் இருந்த 8 மாத குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சோலையம்மாள் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி சோலையம்மாள் உயிரிழந்தார்.

உறவினர்கள் குற்றச்சாட்டு
சோலையம்மாள் உயிரிழப்புக்கு கணவர்தான் காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பிரபாகரன் தினமும் கொடுமை படுத்தி வந்தார். இதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று புகார் கூறினார்கள். பிரபாகரனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் அரசு மருத்துவமனையில் பிணவறை முன்பாக கதறியழுதனர்.

எதனால் தற்கொலை செய்து கொண்டார்?
சோலையம்மாள் எதனால் தற்கொலை செய்து கொண்டார்? அவருக்கும், அவரது கணவருக்கும் நடந்த பிரச்சினை என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 8 மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications