பரோட்டா கடையில் பாக்சிங்! காசு கேட்ட கடைக்காரரின் மூக்குடைப்பு! வசமாய் சிக்கிய திமுக கவுன்சிலர் மகன்
சேலம் : சேலம் அருகே சாப்பிட்ட பரோட்டாவிற்கு பணம் கேட்ட உணவக உரிமையாளரை சரமாரியாக தாக்கிய திமுக பெண் கவுன்சிலர் மகன் உட்பட 4 பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த கோனகாப்பாடி ஊராட்சி அத்திகட்டானூர் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி மகன் செந்தில் குமார்.
இவர் தாரமங்கலத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில் கடந்த 6 மாதங்களாக SP குமரன் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார்.

பரோட்டா கடை
இந்தநிலையில் தாரமங்கலம் நகராட்சி 6 வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் செல்வி என்பவரின் மகன்
அரவிந்த் என்பவர் கடந்த திங்கட்கிழமை கடையில் சாப்பிட்டு காசு கொடுக்காமல் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் கடையில் உரிமையாளர் செந்தில்குமார் கண்டிப்புடன் பேசி சாப்பிட்ட தொகையை வாங்கியுள்ளார்.

திமுக கவுன்சிலர் மகன்
தன்னிடமே பணத்தை பெற்று கொண்டதால் இனி எப்படி கடை நடத்தி விடுவாய் என்று பார்க்கலாம் என்று மிரட்டி விட்டு சென்றுள்ளார் அரவிந்த் . இந்நிலையில் செவ்வாய் கிழமை இரவு குடிபோதையில் 10 பேர் கொண்ட கூட்டாளிகளுடன் வந்த அரவிந்த் மற்றும் கூட்டாளிகள் பரோட்டா, பிளைன் தோசை , முட்டைதோசை என்று அனைத்தும் ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு இறுதியாக ஆம்லெட் ஆர்டர் செய்துள்ளனர்.

சரமாரி தாக்குதல்
அனைத்தையும் சாப்பிட்ட பின்னர் ஆம்லேட் சரியாக வேகவில்லை என்று கூறி வேண்டுமென்றே வம்பிழுத்து உணவக உரிமையாளர் செந்தில்குமாரை அரவிந்த் உடன் வந்த கூட்டாளிகள் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் செந்தில்குமாருக்கு மூக்கு, கண் மற்றும் நெஞ்சு பகுதியில் அதிகமாக அடி விழுந்து உள்ளதால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீசார் விசாரணை
இந்த நிலையில் தாரமங்கலம் காவல்துறையினர் அவர்கள் மீது புகார் தெரிவித்தும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் என்றும் சம்பவம் நடந்து ஏழு நாட்கள் ஆகியும் காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தாரமங்கலம் காவல் துறையினரிடம் விளக்கம் கேட்டபோது உணவக கடை உரிமையாளரை தாக்கிய விவகாரத்தில் திமுக பெண் கவுன்சிலர் மகன் அரவிந்த் உட்பட 4 பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications