கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்! பாஜகவின் விசாரணைக் குழு 2 நாட்களில் அமைக்கப்படும் -அண்ணாமலை தகவல்
சேலம்: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் பற்றி விசாரிக்க பாஜகவின் விசாரணைக் குழு 2 நாட்களில் அமைக்கப்படும் என, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது மக்களின் தலையில் கல்லை போட்டது போல் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

ஆடிட்டர் ரமேஷ்
மறைந்த பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாளையொட்டி சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தில் உண்மையை கண்டறிய பாஜகவின் விசாரணைக் குழு 2 நாட்களில் அமைக்கப்படும் எனக் கூறினார். அசம்பாவிதங்களை தவிர்த்திருக்க வேண்டிய உளவுத்துறை என்ன செய்து வந்தது என வினவினார்.

கண் துடைப்பு
மாவட்ட ஆட்சியரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் மாற்றிவிட்டு நடவடிக்கை எடுத்தது போல் கண் துடைப்பு வேலைகள் நடப்பதாக விமர்சித்தார். இதேபோல் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதிய போலீஸார் இல்லாமல் சிரமப்பட்டதை காண முடிந்ததாக கூறியிருக்கிறார். இதனிடையே மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது மக்களின் தலையில் கல்லை போட்டது போல் இருப்பதாக கூறிய அவர், மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு தான் காரணம் எனக் கூறுவது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்தார்.

மின்சார வாரியம்
தமிழக மின்சார வாரியத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் முதலில் அவற்றை சரிசெய்ய அரசு முன் வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதே தமிழக மின்வாரியத்திற்கு நஷ்டம் ஏற்படக் காரணம் என அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். வீடுகளில் சோலார் இணைப்பு வசதி பெற லஞ்சம் பெறப்படுவதாக குற்றஞ்சாட்டிய அண்ணாமலை ஆன்லைன் மூலம் அனுமதி வழங்கும் நடைமுறையை கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
Recommended Video

விசாரணைக் குழு
ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் பாஜகவும் தனது பங்குக்கு விசாரணைக் குழுவை நியமிக்க இருப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும். தஞ்சை பள்ளி மாணவி லாவன்யா தற்கொலை விவகாரத்தில் பாஜக விசாரணைக் குழு அமைத்தது திரும்பிப்பார்க்கத் தக்கது.












Click it and Unblock the Notifications