முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து விமர்சனம்: எடப்பாடி பழனிசாமி மீது பெங்களூர் புகழேந்தி போலீசில் புகார்
சேலம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது பெங்களூரு புகழேந்தி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
Recommended Video
சேலம் அருகே நிலவாரப்பட்டியில் அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு ஸ்டாலின் மட்டுமின்றி அவரது மகன் மருமகள் மற்றும் குடும்பத்தினர் என நான்கு பேர் முதலமைச்சராக செயல்படுகிறார்கள் என பேசியுள்ளார்.

இதையடுத்து முதல்வர் குறித்து அவதூறாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யக் கோரி அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி இன்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புகழேந்தி, தமிழகத்தில் 4 முதல்வர்கள் ஆட்சி செய்வதாக கூறும் எடப்பாடி பழனிசாமி இந்திய நாட்டை நான்கு பிரதமர்கள் ஆள்வதாக சொல்வாரா என கேள்வி எழுப்பினார்.
மேலும் அதிமுகவின் தோளில் நின்று 4 இடங்களை கைப்பற்றிய பாஜக தனியாக நின்று தமிழகத்தில் ஒரு தொகுதியையாவது கைப்பற்ற முடியுமா என்ற அவர், மக்களால் எதிர்க்கட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவை புறந்தள்ளிவிட்டு பாஜக எதிர்க்கட்சி போல் செயல்பட நினைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் அனைத்தும் ஜோக்கர் போல் உள்ளதாகவும் விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications