மேட்டூர் அணையை நாளை திறக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்...கடைமடை வரை தண்ணீர் சென்று சேருமா?
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, நாகை ஆகிய 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட
சேலம்: காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை நாளை திறக்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைக்கிறார். இதன் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. தூர் வாரும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த தண்ணீர் திறப்பு அணையில் இருக்கும் நீரை பொறுத்து குறித்த நாளில் அல்லது அதற்கு முன்பாகவோ, அதன் பின்பாகவோ திறந்து வைக்கப்படுகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, நாகை ஆகிய 12 மாவட்ட விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக சாகுபடியில் ஈடுபடுகிறார்கள். முதலில் திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபடுவார்கள்.
தமிழக வரலாற்றில் முதல்முறை... கோடையில் நிரம்பிய மேட்டூர் அணை - மே 24ல் திறக்க முதல்வர் உத்தரவு
காவிரியில் வெள்ளம்
கடந்த சில நாட்களாக தமிழக, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதன்படி நேற்று முன்தினம் 115.91 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று மாலை 116.88 அடியாக உயர்ந்தது.
மேட்டூர் அணை
நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 31 ஆயிரத்து 338 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை வினாடிக்கு 25 ஆயிரத்து 161 கனஅடியாகவும், மாலையில் வினாடிக்கு 13 ஆயிரத்து 74 கனஅடியாகவும் குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையை திறக்கும் முதல்வர்
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பும் தருவாயில் உள்ளதால், குறுவை சாகுபடிக்காக முன்னதாகவே தண்ணீர் திறந்து விட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 3 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையம் வருகிறார். இரவு மேட்டூரில் தங்குகிறார்.
காவிரி டெல்டா மாவட்டங்கள்
நாளை காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கிறார். மேட்டூர் அணை தண்ணீர் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை நடத்தினார். மேட்டூர் அணை முன்கூட்டியே திறப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி என்றாலும் கடைமடைவரை தண்ணீர் சென்று சேர வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாகும்