திட்டங்கள் தேர்தலுக்காக அல்ல... மக்களின் தேவைக்காக ... முதல்வர் பழனிசாமி பொளேர்
சேலம்: பொங்கல் பரிசை தடுக்க திமுக முயற்சி செய்ததாக முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
சேலம் கந்தம்பட்டியில் ரூ. 33 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க சேலத்தில் மொத்தம் ரூ.40 கோடி மதிப்பில், 3 புதிய பாலம் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும், 4,049 பயனாளிகளுக்கு ரூ.12.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
ஸ்டாலின் குறித்து விமர்சனம்
இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, மக்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதை வழக்கு போட்டு தடுக்க திமுக முயன்றது. அரசின் நலத்திட்ட சாதனைகள் குறித்த புள்ளி விவரங்கள் தெரியாமல் பேசி வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
தவறான தகவல்
கிராம சபை கூட்டத்தில் அரசை பற்றி ஸ்டாலின் தவறான தகவல்களை பேசி வருகிறார் என்றும் தெரிவித்தார். தமிழக முழுவதும் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
தேர்தலுக்காக இல்லை
ஏழைகளுக்கு தேவையான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களிடம் அதிமுக அரசு அதிக வரவேற்பை பெற்றுள்ளது. திட்டங்கள் எதையும் தேர்தலுக்காக அறிவிக்கவில்லை, மக்களின் தேவைக்காக அறிவிக்கப்படுகிறது என்றும் முதல்வர் பழனிசாமி கூறினார்.
5 மாதங்களில் பணி முடியும்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட கூடாது என்பதற்காகவே உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது. 5 மாதங்களில் புதிய பாலங்கள் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.