கும்மியாட்டத்தை கண்டு ரசித்த எடப்பாடி பழனிசாமி! புத்துயிர் பெற்று வரும் கொங்கு பாரம்பரிய கலை!
சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நடைபெற்ற கொங்கு பாரம்பரிய நாட்டுப்புற கலையான வள்ளி கும்மியாட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டு ரசித்தார்.
மேலும், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொங்கு மண்டலத்தில் மட்டும் நடத்தப்பட்டு வரும் வள்ளி கும்மியாட்டம் நாட்டுப்புற கலையை தமிழகம் முழுவதும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியையும் அளித்துள்ளார்.

நூற்றாண்டு பழமையும், பாரம்பரியமும் மிக்க வள்ளி கும்மியாட்டம் நாட்டுப்புற கலையை கொங்கு மண்டலத்தில் நடைபெறும் திருமண நிகழ்வுகள், கோயில் திருவிழாக்கள், உள்ளிட்ட இன்னும் பல நிகழ்ச்சிகளில் காணலாம். நூற்றுக்கணக்கான பெண்கள் ஒன்று கூடி ஒரே மாதிரி ஆடி பாடுவார்கள். காலப்போக்கில் இந்த கலையானது அழிந்து வந்த சூழலில், இப்போது மீண்டும் கொங்கு மண்டலத்தில் புத்துயிர் பெற்று வருகிறது.
குறிப்பாக இளைஞர்களும், இளம் பெண்களும் இந்தக் கலை மீதான ஆர்வத்தில் கும்மியாட்டத்தில் அதிகம் பங்கேற்க ஆரம்பித்துள்ளனர். கரூர், திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் இந்தக் கலை நிகழ்ச்சி இப்போது பரவலாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டம் சங்ககிரியில் நடைபெற்ற கும்மியாட்டத்தை ஆர்வமுடன் பார்த்து ரசித்த எடப்பாடி பழனிசாமி, கலைஞர்களுக்கு வாழ்த்துக் கூறி பாராட்டினார்.
மேலும், அந்த நிகழ்வில் பேசிய அவர், கும்மியாட்டம் மீண்டும் புத்துயிர் பெற்று வருவதை கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும் கும்மியாட்ட கலையை வளர்க்க வேண்டும் என்ற முன்னோர்களின் கனவை நமது சகோதர, சகோதரிகள் நிறைவேற்றி வருகிறார்கள் எனவும் உற்சாகமாக கூறினார். கொங்கு மண்டலத்தோடு இந்தக் கலையை சுருக்கிவிடாமல் தமிழகம் முழுவதும் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மேற்கொள்ளப்படும் என்ற உறுதியை அளித்தார்.












Click it and Unblock the Notifications