கட்சி வேட்டி கட்டிருக்காரா? யாருங்க அவரு? - ஓபிஎஸ் டீமின் 2 பேரை லெஃப்ட் & ரைட் வாங்கிய ஈபிஎஸ்!
சேலம் : ஜேசிடி பிரபாகர் இன்னும் கட்சி வேட்டியே கட்டாதவர். அவர் அதிமுக கட்சிக்காரன் என சொல்வதற்கே அருகதை அற்றவர் என கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுவடைந்து மாறி மாறி பரபரப்பு குற்றச்சாட்டுகள் கிளம்பி வருகின்றன.
இந்நிலையில், சமீபத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் கிளப்பிய 41,000 கோடி ரகசியம் அதிமுகவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், அதிமுகவில் இருப்பதாக கூறிவரும் ஜேசிடி பிரபாகரனும் கோவை செல்வராஜும் வெவ்வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள், அதிமுகவிற்கு விசுவாசம் இல்லாத இவர்கள், கட்சிக்குள் இருந்து குடைச்சலை ஏற்படுத்தி வருகிறார்கள் என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
'யார் வருவா? யார் இருப்பா?’ கதைய பாருங்க.. எடப்பாடி பழனிசாமியை ரவுண்டு கட்டிய ஓபிஎஸ்!
41,000 கோடி பூதம்
அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் கிளப்பிய 41,000 கோடி மர்மம், அதிமுக வட்டாரத்தில் அனலைக் கிளப்பியுள்ளது. சமீபத்தில் ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகரன், எடப்பாடி பழனிசாமி அணிக்கு எச்சரிக்கை விடுத்தார். அப்போது, வழக்கில் சிக்கிக்கொள்ளாமல் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேரம் பேசிய உண்மைகள், யார் திமுகவுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறார்கள், யார் திமுகவுக்கு சாதகமாக இருக்கிறார்கள் என்பது பற்றி விரிவான விளக்கங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் ஓபிஎஸ் அனுமதி அளித்தால் ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை விரைவில் வெளியிடுவேன் என்றும் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
றெக்கை கட்டி
இந்த தகவல் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு மட்டுமில்லாமல் தமிழக அரசியல் வட்டாரத்தையும் பரபரப்புக்கு உள்ளாக்கியது. அது என்ன 41 ஆயிரம் கோடி மேட்டர் என அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் விவாதமே தொடங்கியுள்ளது. அதிமுக ஆட்சியின்போது, அமைச்சர்கள், அதிமுக தலைமைக்கு கொடுத்த பணத்தை எடப்பாடி பழனிசாமியே வைத்திருந்தார் என்றும், அந்தப் பணத்தை ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வெளியே எடுக்காமல் வைத்துக்கொண்டார் என்றும் அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி ஊடகங்களில் பேசி வருகிறார்.
ஈபிஎஸ்-க்கு தலைவலி
அவ்வளவு பெரிய தொகையை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்தது வருமான வரி வரம்புக்குள் வந்துள்ளதா? அது யாருடைய பணம், அது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என சிபிஐஎம் மாநில செயலாள கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி இருந்தார். இதனால், இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மேலும் தலைவலியாக மாறியுள்ளது. ஓபிஎஸ் தரப்பு தொடுத்துள்ள இந்த அஸ்திரம் எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கட்சி வேட்டியே கட்டாதவர்
ஓபிஎஸ் ஆதரவாளரான ஜேசிடி பிரபாகர் ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை வெளியிட உள்ளதாக கூறியிருப்பது பற்றி நேற்று சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "ஜேசிடி.பிரபாகரன் இன்னும் கட்சி வேட்டியே கட்டாதவர். அவர் அதிமுக கட்சிக்காரன் என சொல்வதற்கே அசிங்கம்.
மடியில் கனமில்லை
பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர். வேடந்தாங்கல் பறவை போன்று சீசனுக்கு சீசன் கட்சி மாறுபவர். ரூ. 41 ஆயிரம் கோடி எங்கே இருந்து எடுக்கப்பட்டது? எதில் எப்படி கொள்ளை அடித்தோம்? இப்போது கூட ஊழல் தொடர்பாக என் மீது வழக்கு போட்டனர். உச்சநீதிமன்ற விசாரணையில் வழக்கை திரும்ப பெறுவதாக திமுக ஆர்எஸ் பாரதி கூறினார். வழக்கை நடத்தி ஆக வேண்டும் என கூறியுள்ளேன். ஏனென்றால் என் மீது போடப்பட்ட வழக்கு என்பது அவதூறானது. எங்களை பொறுத்தவரை மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை." எனத் தெரிவித்தார்.
யாரு இவரு
மேலும், 2 முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நாங்கள் தெரிவித்ததால்தான் ரெய்டு நடந்தது என கோவை செல்வராஜ் தெரிவித்து இருக்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "கோவை செல்வராஜ் யார்? கட்சிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? அவர் எங்கிருந்து வந்தார்? அவருக்கு அதிமுக வரலாறு தெரியுமா? யார்,யாரெல்லாம் வெவ்வேறு கட்சியில் இருந்து வருகிறார்களோ அவர்கள் சொல்வதை ஊடகங்கள் பெரிதுபடுத்துகிறது.
அதிமுகவில் களையெடுப்பு
கோவை செல்வராஜூம், ஜேசிடி பிரபாகரனும் அதிமுகவிற்கு விசுவாசம் இல்லாதவர்கள். கட்சிக்குள் இருந்தே அதிமுகவிற்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர். அதனால் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒரு பயிர் செழித்து வளர வேண்டும் என்றால் களை எடுப்பார்கள். இவர்கள் போன்றவர்களைகளை களை எடுத்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.