எடப்பாடி பழனிசாமியின் செண்டிமெண்ட்! பரப்புரை பயணத்துக்கு முன்னர் அன்னதானம்!
சேலம்: சேலம் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோவிலில் தரிசனம் செய்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அங்கிருந்து தொடங்கியிருக்கிறார்.
பிரச்சாரப் பயணத்தை தொடங்குவதற்கு முன்னதாக அன்னதானம் வழங்கிய எடப்பாடி பழானிசாமி, கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும் இதே சென்றாய பெருமாள் கோவிலில் வழிபாடு நடத்திய கையோடு பரப்புரையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆட்சியை பிடிக்கமுடியவில்லை என்றாலும் கூட கணிசமான இடங்களில் அதிமுகவை வெல்ல வைத்து எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் எடப்பாடி பழனிசாமி கைபற்றியது திரும்பி பார்க்கத் தக்கது.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சாரப் பயணங்களை தொடங்கிவிட்டனர். திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் காணொலி மூலம் இன்று மாலை பிரச்சாரத்தை தொடங்குகிறார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலை மதுரை புறப்பட்டு சென்று நாளை சிவகாசி மாநகராட்சியில் பரப்புரை செய்யவிருக்கிறார்.

பெருமாள் கோவில்
முன்னதாக சேலம் மாவட்டம் வனவாசி அருகே உள்ள பெரியசோரகை சென்றாய பெருமாள் கோவிலில் இன்று காலை சாமிதரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி, அன்னாதனமும் வழங்கினார். ஒவ்வொரு தேர்தலின் போதும் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்னர் தனது மனதுக்கு பிடித்த அந்த கோவிலில் வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பெருமாள் கோவிலை செண்டிமெண்டாக கருதும் அவர், எடப்பாடி நகராட்சியில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்டு பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்.

சுற்றுப்பயணம்
ஒரு வாரகாலம் சூறாவளி சுற்றுப்பயணத்துக்கு திட்டமிட்டுள்ள அவர், பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களிலெல்லாம் ஆளுங்கட்சியான திமுகவை அட்டாக் செய்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பொங்கல் பரிசுத் தொகுப்பு, நீட் தேர்வு, உள்ளிட்ட விவகாரங்களை எடப்பாடி பழனிசாமி கையிலெடுப்பார் எனத் தெரிகிறது. இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் காணொலி மூலம் தினமும் ஒரு மாநகராட்சிக்கு பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.

நம்பிக்கை
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் கோவை, சேலம் உட்பட 10 மாநகராட்சிகளிலாவது அதிமுக வெற்றிபெறும் என்பது எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கையாக உள்ளது. அதேபோல் 138 நகராட்சிகளில் 50 நகராட்சிகளையாவது அதிமுக கைப்பற்றும் என்பதும் அவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications