கடல் போல இருக்குமே..! வறண்ட மேட்டுர் அணை.. குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வருமா? டெல்டா விவசாயிகள் கவலை
சேலம்: குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு 46 அடி மட்டுமே அணையில் நீர் இருப்பு உள்ளது. இதனால் தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி காட்சியளித்தன. கோடை வெயில் மார்ச் மாதம் முதலே அனலாக கொதித்தது. தமிழகம் முழுக்கவே வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருந்தது.

பெரும்பாலான நகரங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் சென்றதால் நீர் நிலைகளில் தண்ணீர் வறண்டது. இதே நிலை நீடித்தால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் திடீரென கோடை மழை கொட்டியது. கடந்த வாரத்தில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்தது. அதிலும் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பருவமழை போல வெளுத்து வாங்கியது. இதனால் அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.
அதே வேளையில், மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து வருவதால் நீர் பிடிப்பு பகுதியான பண்ணவாடி பகுதியில் உள்ள பழங்கால நந்தி சிலை வெளியே தெரிகிறது. காவிரி டெல்டா பகுதிகளின் உயிர் நாடியாக மேட்டூர் அணை திகழ்ந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர் மூலம்தான் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி, சம்பா, தாளடி என முப்போகம் விளைவிக்கப்படுகிறது.
மேட்டூர் அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 120 அடி, நீர் பரப்பு 152 சதுர கி.மீ. ஆகும். மேட்டூர் அணையின் நீர் மட்டம் 70 அடிக்கு கீழ் குறையும் போது பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருக்கும் நந்தி சிலையின் தலைப்பகுதி மட்டும் வெளியே தெரியும். இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைய தொடங்கியுள்ளது.
தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 46 அடிதான் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வருடம் தோறும் ஜூன் 12 ஆம் தேதி டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடுவார்கள். 90 அடிக்கு மேல் நீர் இருந்தால்தான் தண்ணீர் திறந்து விடுவார்கள் என்றும் தற்போது தண்ணீர் குறைவாக இருப்பதால் தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை எனவும் சொல்லப்படுகிறது. இதனால், டெல்டா பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் தண்ணீர் குறைந்துள்ளதால் நீரில் மூழ்கியிருந்த நந்தி சிலை உள்ளிட்டவை தரைமட்டத்திற்கு தெரிகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென் மேற்கு பருவமழை கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தொடங்கியுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீரானது ஜூலை மாதம் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தான் வரும் என தெரிகிறது. அதுவரை விவசாய சாகுபடி செய்வதற்கு மாற்று திட்டத்தை தமிழக அரசு செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications