கியாஸ் தட்டுப்பாடு.. இண்டக்ஷன் அடுப்பு பயன்படுத்துவோருக்கு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு
சேலம்: இண்டக்ஷன் அடுப்பு, குளிர்சாதனப் பெட்டி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும். கியாஸ் தட்டுப்பாடு காரணமாக கியாஸ் சிலிண்டர் பயன்பாட்டிற்கு மாற்றாக இண்டக்ஷன் அடுப்பு பயன்படுத்தும் போது, பழைய இண்டக்ஷன் அடுப்பின் தரம், மின் ஒயரிங், கேபிள் தரம், மின்பளு தாங்கும் திறன் ஆகியவற்றைப் பரிசோதனை செய்து பயன்படுத்த வேண்டும் என்று சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குணவர்த்தினி அறிவுறுத்தியுள்ளார்.
கியாஸ் தட்டுப்பாடு நாடு முழுவதும் இருக்கிறது. இதனால் பலர் இண்டக்ஷன் அடுப்பு பயன்படுத்துகிறார்கள்.. அப்படி பயன்படுத்த போகிறார்கள். மின்சார வயர்கள் மற்றும் போர்டில் நிச்சயம் மாற்றம் செய்ய வேண்டும்.. சாதாரண மின்விளக்கு அல்லது மின்விசிறியை விட இண்டக்ஷன் அடுப்பு அதிக மின்சாரத்தை அதாவது 2000 வாட்ஸ் அல்லது 3000 வாட்ஸ் வரை இழுக்கும். எனவே, வீட்டு மின் இணைப்பில் சில மாற்றங்களைச் செய்வது பாதுகாப்பானது: சாதாரண 0.75mm அல்லது 1.0mm வயர்கள் இண்டக்ஷன் அடுப்பின் பளுவைத் தாங்காது. வயர் சூடாகி உருகி, 'ஷார்ட் சர்க்யூட்' ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அடுப்பிற்குத் தனி இணைப்பாக 2.5mm மில்லிமீட்டர் தடிமனுள்ள வயர்களைப் பயன்படுத்துவது சிறந்தது.

அதேபோல் சாதாரண 5 ஆம்பியர் சாக்கெட்டில் இண்டக்ஷன் அடுப்பைச் செருகக் கூடாது. அது உருகிவிடும். எனவே ஏசி (AC) அல்லது பிரிட்ஜ்-க்கு பயன்படுத்துவது போன்ற 16 ஆம்பியர் (16A) பவர் சாக்கெட் மற்றும் சுவிட்சைப் பொருத்த வேண்டும். அதேபோல் வீட்டில் 'எர்த்' வசதி சரியாக இருக்கிறதா என்று சோதித்துக் கொள்ள வேண்டும. இல்லையென்றால், அடுப்பின் உலோகப் பாத்திரத்தைத் தொடும்போது மின்சாரம் தாக்க வாய்ப்புள்ளது.
மின் கசிவு ஏற்பட்டால் உடனடியாக மின்சாரத்தைத் துண்டிக்கும் RCD ( அல்லது ELCB சுவிட்சை மெயின் போர்டில் பொருத்துவது மிக மிக முக்கியம். இது உயிர் காக்கும் கருவியாகும்.அதேபோல் இன்டக்சனை பொறுத்தவரை மல்டி-பிளக் அல்லது மெல்லிய எக்ஸ்டென்ஷன் பாக்ஸ்களை இண்டக்ஷன் அடுப்பிற்குப் பயன்படுத்தவே வேண்டாம். அது எளிதில் தீப்பிடிக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.
இந்நிலையில் சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குணவர்த்தினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- "கோடைகாலத்தில் பொதுமக்கள் மின் சாதனங்கள் மற்றும் மின் அடுப்புகளைப் பாதுகாப்பாகக் கையாள வேண்டும். அதாவது, மின் விபத்துகளைத் தவிர்க்கத் தங்களது மின் இணைப்பில் எர்த் சர்க்யூட் பிரேக்கர்களை (ELCB) தவறாமல் நிறுவ வேண்டும். அனைத்து மின் இணைப்புகளும் ஆர்.சி.டி. (RCD) பொருத்தி மின் விபத்துகளைத் தவிர்க்க வேண்டும். ஐ.எஸ்.ஐ. (ISI) முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
இண்டக்ஷன் அடுப்பு, குளிர்சாதனப் பெட்டி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன் (Earthing) கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும். கியாஸ் தட்டுப்பாடு காரணமாக கியாஸ் சிலிண்டர் பயன்பாட்டிற்கு மாற்றாக இண்டக்ஷன் அடுப்பு பயன்படுத்தும் போது, பழைய இண்டக்ஷன் அடுப்பின் தரம், மின் ஒயரிங், கேபிள் தரம், மின்பளு தாங்கும் திறன் ஆகியவற்றைப் பரிசோதனை செய்து பயன்படுத்த வேண்டும்.
நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாத மின்சார சாதனங்களைப் பயன்படுத்தும் முன்பு கட்டாயம் பரிசோதனை செய்து உறுதி செய்ய வேண்டும். குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தி இயங்கக்கூடிய அதிக மின்திறன் கொண்ட மின்சாதனப் பொருட்களை உபயோகப்படுத்த வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications