ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜ் விபத்து... கொலையா?.. மீண்டும் விசாரணை.. போலீஸ் அதிரடி முடிவு
சேலம்: கொடநாடு விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது . மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நள்ளிரவில் ஒரு மர்ம கும்பல் அங்கே புகுந்து காவலாளி ஓம் பகதூர் என்பவரை கொலை செய்துவிட்டு எஸ்டேட் உள்ளே இருந்த பல பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது.
இந்த சம்பவத்தின்போது, பல முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.

கொடநாடு கொள்ளை
கொள்ளை நடைபெற்றபோது கோடநாடு எஸ்டேட் பகுதிக்கு செல்லும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது இதன் பின்னணியில் பலர் இருப்பதாக போலீசார் சந்தேகப்பட்டனர். இந்த கொலை, கொள்ளை வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கார் டிரைவராக வேலை பார்த்து வந்த கனகராஜ் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

ஆத்தூர் அருகே சம்பவம்
கனகராஜ் தேடப்பட்டு வந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஒரு கார் மோதி உயிரிழந்தார். இந்த கார் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட பெங்களூரில் வசிக்கும் ஒரு பெண்மணிக்கு சொந்தமானது. அவரது கணவர் ஏற்கனவே, உயிரிழந்த நிலையில், மாமியார், குழந்தைகள் உள்ளிட்ட தனது குடும்பத்தினரோடு அவர் காரில் பயணித்தபோதுதான் அதில் சிக்கி கனகராஜ் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

மீண்டும் விசாரிக்க உத்தரவு
இந்த விபத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால் கனகராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது கொலை செய்யப்பட்டு பிறகு, இந்த காரின் முன்பாக வீசப்பட்டு இருக்கலாம் என்ற பல்வேறு கருத்துக்களை சமீபத்தில் சிலர் தெரிவித்து அது ஊடகங்களில் செய்திகளாக வெளியாகியிருந்தன. எனவே இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. கனகராஜ் விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விசாரணை தீவிரம்
காரின் உரிமையாளர் மற்றும் அந்த காரை ஓட்டி வந்தவர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் இந்த காருக்கு டிரைவரை, அதிமுக பிரமுகர் ஒருவர் ஏற்பாடு செய்து கொடுத்ததாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. எனவே இந்த விவகாரத்தை விசாரிக்க தொடங்கும்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications