ஆரத்திக்கு பணம் கொடுக்க போன அதிமுக வேட்பாளர்.. 'ஏய்.. எடுக்காதே'என கத்திய எடப்பாடி பழனிசாமி!
சேலம்: லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது சேலத்தில் அதிமுக வேட்பாளர் ஆரத்திக்கு பணம் கொடுக்க முயன்ற போது, ஏய்.. ஏய்.. எடுக்காதே' என அக்கட்சிப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கத்தி தடுத்த சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
லோக்சபா தேர்தல் பிரசாரம் தமிழ்நாட்டில் களைகட்டியுள்ளது. முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 22-ந் தேதி திருச்சியில் பிரசாரத்தைத் தொடங்கினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அதிகாரப்பூர்வமாக இன்று திருச்சி அருகே 40 தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரசாரத்தை தொடங்குகிறார்.

தமிழ்நாடு, புதுவையில் போட்டியிடும் அதிமுக கூட்டணியின் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் கூட்டணி கட்சிகளான தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சித் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
முன்னதாக இன்று சேலம் லோக்சபா தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றார். வீதி வீதியாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் துண்டு பிரசுரங்களை கொடுத்து வந்தனர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து திலகமிட்டனர். பொதுவாக ஆரத்தி எடுக்கும் போது பெண்களின் ஆரத்தி தட்டில் பணம் போடுவது வழக்கம். ஆனால் தற்போது தேர்தல் நேரம். ஆரத்திக்கு பணம் கொடுப்பது என்பது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக சர்ச்சையாகி புகாராக வெடித்து விடும். இதனால் "பொது இடங்களில்" ஆரத்திக்கு வேட்பாளர்கள் பணம் தருவதில்லை. அத்தனை கூட்டமும் கலைந்த பின்னர் உள்ளூர் நிர்வாகிகள் மூலம் ஆரத்தி பெண்களுக்கு பணப் பட்டுவாடா நடக்கும்.
ஆனால் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுக்க சட்டப்பையில் கை வைத்தார் அதிமுக வேட்பாளர். இதனை சட்டென கவனித்துவிட்ட பழனிசாமி ஏய்..ஏய்.. எடுக்காதே.. என கத்தி தடுத்துவிட்டார். இதனால் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் சர்ச்சையில் இருந்து அதிமுக வேட்பாளர் தப்பிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications