தனி விமானத்தில் சேலம் பயணம்... அதிரடியாக நான்காம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கிய கமல்
சேலம்: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சேலத்தில் தனது நான்காம் கட்ட பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
தமிழ்நாட்டில் வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்கி நடத்தி வருகின்றனர்.
அதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடந்த மாதம் மதுரையில் தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மூன்று கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தார்.
சிறிய இடைவெளிக்கு பின் மநீம தலைவர் கமல்ஹாசன் வரும் 6ஆம் தேதி வரை சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் நான்காம் கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.
இதற்காகச் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்தடைந்த கமல்ஹாசனுக்கு விமான நிலையத்தில் அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து சேலம் அழகாபுரம் பகுதியில் தனது நான்காம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய அவர், திறந்தவெளி காரில் நின்று மக்களிடம் உரையாற்றினார்.
வழிவிட்ட ரஜினி.. ஹைலைட்டாகிறார் கமல்.. இனிதான் இருக்கு.. அதிரடி அரசியல் காட்சிகள்!
பின்னர் அங்கிருந்து அஸ்தம்பட்டி, கோரிமேடு வழியாக ஏற்காடு சென்ற அவர், ஏரிக்கரை ரவுண்டானா பகுதியிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் தோட்ட தொழிலாளர்களைச் சந்தித்து, அவர்களுடனும் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.