இந்து மதம் பற்றி அவதூறு? இளைஞரை கைது செய்த போலீஸ்.. கலெக்டர் அலுவலகம் முற்றுகை.. சேலத்தில் பரபரப்பு!
சேலம் : இந்து மதம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்ய முயன்றதை கண்டித்து இஸ்லாமியர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசாரை கண்டித்தும், அந்த இளைஞரை விடுவிக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முஸ்லீம் அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
போராடிய இளைஞர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றதால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

முஸ்லீம் இளைஞர்
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்கர் என்ற இளைஞர், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்து மதம் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டுள்ளதாக கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் சிலர் புகார் அளித்தனர். அதன் பேரில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரைத் தேடி வந்தனர்.

கைது
போலீசார் தேடிய அந்த இளைஞர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நபர்களை கண்டித்து முஸ்லீம் யூத் லீக் அமைப்பு சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். இதனைக் கண்டித்து முஸ்லீம் யூத் லீக் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்
மேலும் போலீஸ் வாகனத்தின் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போராடிய இளைஞர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இரவிலும் போராட்டம்
பின்னர் அந்த வாலிபரை போலீசார் விடுவித்தனர். இதையடுத்து அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் முடிவடைந்ததும் மீண்டும் அந்த வாலிபரை விசாரணைக்காக போலீசார் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து போலீசாரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முஸ்லீம் அமைப்பினர் தொடர்ந்து இரவிலும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications