உஷார்.. “மெடிக்கல் சீட் தானே.. ஈஸியா வாங்கலாம்” - நீட் எழுதிய மாணவர்களை குறிவைக்கும் மர்ம கும்பல்!
சேலம்: நீட் தேர்வு எழுதிய மாணவியிடம் கல்லூரியில் சீட் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு எழுதிய மாணவியிடம், ஆந்திராவில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் சீட் பெற்றுத் தருவதாக கூறி, 6 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
ஏமாந்த மாணவி சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாணவி
சேலம் கிருஷ்ணம்மாள் நகரைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகள் ரோஷினி. இவர், மருத்துவப் படிப்பை மேற்கொள்வதற்காக நீட் நுழைவுத்தேர்வு எழுதிவிட்டு, தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில், அரசு மருத்துவ கல்லுாரியில் சேர தொடர்பு கொள்ளும்படி கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி அவரது மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் வந்துள்ளது.

டெல்லியில் இருந்து
அந்த எண்ணிற்கு மாணவி ரோஷினி தொடர்பு கொண்டபோது பேசிய நபர், டெல்லியில் இருந்து ஹர்ஷவர்தன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தற்போது தமிழ்நாட்டில் சீட் கிடைப்பது கடினம். ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சீட் வாங்கித் தர முடியும். நிச்சயமாக சீட் வாங்கிவிடலாம் கவலையே படாதீர்கள் எனக் கூறியுள்ளார்.

நம்பிய மாணவி
அந்த நபர் பேசியதை நம்பிய ரோஷினி, தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். பின்னர், மீண்டும் அவரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவர்களிடம் அந்த நபர், ஆந்திராவின் அனந்தபூர் மருத்துவக் கல்லுாரியில் இடம் பெற்றுத் தருவதாக கூறி, சேர்க்கை கட்டணத்தை செலுத்திவிட்டுச் சொல்லுங்கள் எனக் கூறி ஒரு வங்கி கணக்கு விபரங்களை அனுப்பியுள்ளார்.

6 லட்சம் மோசடி
மாணவி ரோஷினியும் அந்த வங்கிக் கணக்கிற்கு 6 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளர். அதன் பிறகு, அந்த நபருக்கு தொடர்பு கொண்ட போது 'சுவிட்ச் ஆப்' என தகவல் வந்துள்ளது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரோஷினி, சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த மோசடி தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

போலீசார் எச்சரிக்கை
இதுபோன்ற மோசடிகள் தற்பொது அதிகமாக நடைபெற்று வருகின்றன. உயர்கல்வி படிப்பதற்காக கனவுகளுடன் இருக்கும் மாணவர்களைக் குறிவைத்து இதுபோன்ற கும்பல்கள் களமிறங்கி இருப்பதாகவும், மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications