ஆஹா.. இந்தா வந்துட்டாருல்ல.. லிம்கா புகழ் பத்மராஜன்.. 227வது முறையாக களமிறங்கிய தேர்தல் மன்னன்..!
தேர்தல் மன்னன் 227வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்
சேலம்: 227வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார் தேர்தல் மன்னன் பத்மராஜன்.. வீரக்கல் புதூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட பத்மராஜன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்
மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன்.. 62 வயதாகிறது.. இவர் அதே பகுதியில் பழைய லாரி மற்றும் பேருந்து சக்கரங்களை புதுப்பிக்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இவருக்கு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆசை.. அதற்காக எல்லா வகையான தேர்தல்களிலும் வேட்புமனு தாக்கல் செய்து வருவதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.
Exclusive: கனிமொழியை பாராட்டியதில் தவறு இல்லை.. தலைமை முடிவுக்கு கட்டுப்படுகிறேன்- நவநீதகிருஷ்ணன்
உள்ளாட்சி தேர்தல்
கடந்த 1986-ம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மேட்டூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டதுதான் இவரது முதல் தேர்தல் அனுபவம்.. அதற்கு பிறகு, 1988ம் ஆண்டு முதல் இப்படி தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார்.. எம்பி தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என ஒன்றைகூட விட்டுவைக்க மாட்டார்.. கூட்டுறவு சங்க தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், இவரது சாதனைகள் லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
ஹைலைட்
30 வருடங்களுக்கு மேலாக அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார் பத்மராஜன்... ஆனால் ஒருமுறை கூட வெற்றி பெற்றது கிடையாது.. இதில் ஹைலைட் என்னவென்றால், அகில இந்திய அளவில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை எதிர்த்தும் பத்மராஜன் தேர்தலில் மனு தாக்கல் செய்துள்ளார். அதிலும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயை எதிர்த்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ தொகுதியிலும், முன்னாள் பிரதமர் நரசிம்மராவை எதிர்த்து ஆந்திர மாநிலத்தில் உள்ள நந்தியால் தொகுதியிலும் சுயேட்சையாக போட்டியிட்டதால், அகில இந்திய அளவில் ஃபேமஸ் ஆனார் பத்மராஜன்.
மோடி, ஜெயலலிதா
ஜெயலலிதா, மோடியையும் இவர் விட்டுவைக்கவில்லை.. தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரியில் ஐந்தாவது முறையாக எம்பி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர் பத்மராஜன்.. நடிகர் சங்க தேர்தலையும் இவர் விட்டுவைக்கவில்லை.. அதிலும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்து பரபரப்பையும் ஏற்படுத்தியவர்.. இவர் நாடக நடிகர் என்கிற அடிப்படையில் உறுப்பினர் அட்டை இருப்பதால் அந்த அடிப்படையில் நடிகர் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
கவுன்சிலர் பதவி
இதனால் இவருக்கு 'தேர்தல் மன்னன்' என்ற பட்டப்பெயரே உண்டு.. இந்நிலையில் இன்று தேர்தல் மன்னன் பத்மராஜன் 227-வது முறையாக வீரக்கல் பேரூராட்சி அலுவலகத்தில் 2-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வீரக்கல் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரான ஜேம்ஸ் என்பவரிடம் அவர் வேட்பு மனுவை வழங்கினார். இது குறித்து பத்மராஜன் சொல்லும்போது, "எனக்கு வெற்றி தோல்வி எல்லாம் இலக்கு கிடையாது.. அதிக தேர்தலில் போட்டியிட்ட நபர் என்ற வரலாற்றை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதே என்னுடைய ஒரே லட்சியம்" என்றார்..