சேலம் ஆத்தூரில் அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடங்கள்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சேலம்: சேலம் ஆத்தூரில் அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் தொடர்பான வழக்கில் நான்கு வார காலத்திற்குள் பதில் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த வி மணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள காமராஜர் சாலையில் சட்ட விரோதமாக அனுமதி இன்றி 12க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த கட்டிடத்தில் தனியார் கண் மருத்துவமனைகள், வங்கிகள், ஜவுளிக்கடைகள், மற்றும் நகைக்கடை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த கட்டிடங்களுக்கு நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்பி அபராதம் விதித்துள்ளனர். அதற்கு அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிட உரிமையாளர்களும் அபராதம் செலுத்தியுள்ளனர்
இதனுடைய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி சில விளக்கங்கள் கேட்டு இருந்தேன். அப்போது நடவடிக்கை எடுப்பதாக ஆத்தூர் நகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுத்து கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நகராட்சி ஆணையிடம் மனு கொடுத்தேன். அந்த மனு மீது இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே நீதிமன்றம் இதில் தலையிட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி கிருஷ்ணகுமார் நீதிபதி குமரேஷ்பாபு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.முருகபாரதி ஆஜராகி, மனுதாரர் கொடுத்த கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டார்.
இந்த வழக்கில் நான்கு வார காலத்துக்குள் பதிலளிக்குமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆத்தூர் நகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications