சேலத்தில் ரூ.500 கோடி சுருட்டிய பெண்ணுக்கு ஆதரவாக வந்த மக்கள்! விஜயா பானுவை வெளியே விடுங்க: ஒரே பரபர
சேலம்: சேலத்தில் ரூ.500 கோடி மோசடி தொடர்பாக கைதாகியுள்ள 4 பேரிடமும், விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. ஆனால், இதில் பிரதான குற்றவாளியான விஜயாபானுவுக்கு ஆதரவாக, பாதிக்கப்பட்ட மக்களே போராட்டம் செய்திருப்பது சேலம் மாவட்டத்தின் கவனத்தை பெற்று வருகிறது. என்ன நடந்தது?
வேலூரை சேர்ந்த விஜயாபானு, ஜெயபிரதா உள்ளிட்ட சிலர், சேலம் அம்மாப்பேட்டையில், ஒரு தனியார் திருமண மண்டபத்தில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளையை நடத்தி வந்துள்ளனர். இதன்மூலம் மலிவு விலையில் உணவு, இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, பல்வேறு தொழில்கள் குறித்த பயிற்சி தந்துள்ளனர்.

பயிற்சிகள்: அப்படி தங்களிடம் பயிற்சிக்கு வந்தவர்களிடம், அறக்கட்டளையில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவோம், இரட்டிப்பு தொகை தருவோம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி , பலரும் பணத்தை முதலீடு செய்திருக்கிறார்கள்.. இப்படி முதலீடு செய்தவர்களை நம்பவைப்பதற்காக ஆரம்பத்தில் ஓரளவு பணமும் அவர்களுக்கு தரப்பட்டது.
இதனால் நம்பகத்தன்மை அதிகமாகி, மேலும் ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர்.. எந்நேரமும் இந்த பயிற்சி நிறுவனத்தில் கூட்டம் அதிகமாக காணப்படவும், சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அந்த அறக்கட்டளைக்கு உள்ளே சென்ற, சோதனை நடத்தினார்கள். அப்போது ரூ.12 கோடியே 65 லட்சம், இரண்டரை கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளியை பறிமுதல் செய்து, நிர்வாகி ஜெயபிரதா, பாஸ்கர், சையத் மஹ்மூத் உள்பட 4 பேரையும் கைது செய்து, கோவை சிறையில் அடைத்தனர்.
விசாரணை: இது தொடர்பாக கைதானவர்களிடம் சேலம் பொருளதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள். கிட்டத்தட்ட ரூ.500 கோடி வரை இந்த அறக்கட்டளை மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. 119 பேர் இதுவரை புகார் தந்துள்ளனர்.. ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களும், அறக்கட்டளையில் முதலீடு செய்திருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் இருக்கக்கூடும் என்கிறார்கள். விஜயாபானு, ஜெயபிரதாவின் 6 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதில் விஜயாபானு என்பவர், பாஜக, திமுக நிர்வாகி என கூறிக்கொண்டு பலரையும் ஏமாற்றியிருக்கிறார்.. கடந்த 2011-ம் ஆண்டு தன்னை ஐபிஎஸ் அதிகாரி என கூறி பெண் போலீஸ் மகளிடம் 22 நகையை பறித்துள்ளார்..
சேலம் பெண்: ஆனால், சேலத்தில் 2000க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ரூ.500 கோடி மோசடி செய்திருக்கும் நிலையில், விஜயாபானு மிகவும் நம்பிக்கைக்குரியவர்.. அவர் சிறையில் இருந்து வந்தவுடன் பணத்தை திரும்ப தந்து விடுவார் என பொதுமக்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்களாம்.
அதுமட்டுமல்ல, 2000 க்கும் மேற்பட்டவர்கள் அவரிடம் ஏமாந்துள்ள நிலையில், வெறும் 119 பேர் மட்டுமே இதுவரை போலீசில் புகார் அளித்திருக்கிறாராம்.. மற்றவர்களும் புகார் அளித்தால்தான் பணத்தை மீட்டு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தரப்பில் கூறுகிறார்கள்.
ஆதரவு போராட்டம்: இப்படிப்பட்ட சூழலில், அறக்கட்டளைக்கு ஆதரவாக சிலர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.. பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணத்தை மீட்டு தர வேண்டும், அல்லது கைது செய்யப்பட்ட விஜயபானுவை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதையடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பாதிக்கப்பட்டவர்கள் முறையான புகார் அளிக்குமாறு வலியுறுத்தினர்.
பேச்சுவார்த்தை: அதற்கு போராட்டக்காரர்கள், "விஜயபானுவை விடுதலை செய்தால் பணத்தை, நாங்களே வாங்கிக் கொள்கிறோம்.. போலீசார் நடத்திய சோதனையால் தான் எங்களது பணம் கிடைக்காமல் போய்விட்டது" என்று தெரிவித்துள்ளனர்.. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியதுடன், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி தந்தனர்.. இதற்கு பிறகே அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக்கோரி, பாதிக்கப்பட்டவர்களே போராட்டம் செய்திருப்பது சேலத்தில் பரபரப்பையும், இந்த அறக்கட்டளை வழக்கு விசாரணையின் தீவிரத்தையும் அதிகப்படுத்தி வருகிறது.
அம்பேத்கர் மக்கள் கட்சி: முன்னதாக, அறக்கட்டளைக்கு ஆதரவாகவும், போலீசாருக்கு எதிராகவும் துண்டறிக்கை வெளியிட்டு, அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவனர் அம்பேத்கர், போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவர் மீது வழக்குப்பதிந்த சேலம் டவுன் போலீசார், போராட்டத்துக்கு அனுமதி மறுத்தது..
எனினும், நேற்று சேலம் கோட்டை மைதானத்தில், விஜயபானுவை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, அம்பேத்கர், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு சென்றார்.. ஆனால் அறக்கட்டளை ஏஜன்ட்கள் உள்ளிட்டோர், மறியலுக்கு முயன்றதுடன், போலீசாருடன் வாக்குவாதமும் செய்துள்ளனர்.. இதையடுத்து, சீனிவாசன், 54, சுகந்தி தேவி, 34, சேலம், அம்மாபேட்டை பாஸ்கர், 36, செல்வம், 56, பரணி, 45, ஆகியோரை, போலீசார் கைது செய்ய நேரிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications