10 ரூபாய் சாப்பாட்டில் விஜயாவிடம் விழுந்த சேலம்! தேனாய் பேசி ரூ.500 கோடி விழுங்கிய 2025ன் மோசடி ராணி
சேலம்: தமிழகத்தில் பலவகையான மோசடி சம்பவங்கள் பெருகி வருகின்றன. மோசடிக்காரர்களும் கைதாகி ஜெயிலுக்கு சென்று வருகிறார்கள்.. அந்தவகையில் இந்த வருடம் 2025-ல் தமிழகத்தையே உலுக்கிய மோசடி வழக்குதான் சேலம் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளையை வழக்கு. இதற்கு மூளையாக இருந்து செயல்பட்ட விஜயா பானு என்ற பெண்மணி, அரங்கேற்றிய மோசடிகளும், அந்த மோசடி சம்பவங்கள் சேலம் மக்களிடையே இந்த வருடம் ஏற்படுத்தி தாக்கத்தையும், அதிர்ச்சியையும் மறக்க முடியாது. அதை பற்றி இங்கே பார்ப்போம்.
வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியை சேர்ந்தவர் விஜயா பானு.. கடந்த 2011, 2012 காலகட்டத்திலேயே மோசடி வழக்கில் புழல் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டவர்.. ஆனால் அங்கேயும் ஜெயில் வார்டன் விஜயாவிடம் மோசடி செய்துள்ளார்.

தங்க நகை மோசடி
"டெல்லியில் தான் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றுவதாகவும், ஜெயிலில் நடக்கும் ஊழலை ரகசியமாக அறிந்துகொள்ள, சிறையில் இருப்பதாகவும் சொல்லி அறிமுகமாகி உள்ளார்.. பிறகு சிஎம்சியில் மேம்பாலம் கட்டும் காண்ட்ராக்ட்டுக்கு பணம் பற்றாக்குறையாக உள்ளதாக கூறி, விஜயாவிடம், 22 சவரன் நகை, 5 லட்சம் ரூபாயை சுருட்டியவர் விஜயா பானு.
13 வருடமாக நடந்த இந்த வழக்கில்தான் தற்போது விஜயா பானுவுக்கு 17 வருடம் சிறைதண்டனை கிடைத்துள்ளது..
ஆனால், விஜயா பானுவின் மோசடிகள் கணக்கிலடங்காதவை.. அதில் ஒன்றுதான், சேலத்தில் நடத்திய அறக்கட்டளை மோசடி சம்பவம்..
சேலம் அறக்கட்டளை விஜயாபானு
சேலம் அம்மாப்பேட்டையில், ஒரு தனியார் திருமண மண்டபத்தில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளையை நடத்தி வந்துள்ளார் விஜயா பானு.. இதன்மூலம் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, பல்வேறு தொழில்கள் குறித்த பயிற்சியை தந்து வந்துள்ளார்..
அரசு பள்ளி மாணவர்களுக்கு டியூசன், பெண்களுக்கு கூடைப் பின்னல், பாக்குத்தட்டு தயாரிப்பு, மெழுகுவர்த்தி, சாம்பிராணி தயாரிப்பு மற்றும் கைவினைத் தொழில்கள் கற்றுத் தரப்படும் என்றும் விளம்பரம் செய்து, பலரை ஈர்த்துள்ளார்.
அதேபோல தங்களிடம் பயிற்சிக்கு வந்தவர்களிடம், அறக்கட்டளையில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவோம், இரட்டிப்பு தொகை தருவோம் என்று ஆசைவார்த்தை கூறி, பலரையும் முதலீடு செய்ய வைத்துள்ளார். இப்படி முதலீடு செய்தவர்களை நம்பவைப்பதற்காக ஆரம்பத்தில் ஓரளவு பணமும் தரப்பட்டுள்ளது. இதனால் நம்பகத்தன்மை அதிகமாகி ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்துள்ளனர்..
அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாகக் கூறி, பண மோசடி திட்டத்தையும் அறிமுகம் செய்தார் விஜயா பானு.. ஒருவர் 1,000 ரூபாய் முதலீடு செய்தால், ஒன்றரை மாதத்தில், 2,000 ரூபாய்க்கான மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதனால் எந்நேரமும் இந்த பயிற்சி நிறுவனத்தில் கூட்ட நெரிசல் இருந்துள்ளது.,. இதுதான் சேலம் போலீசாருக்கு சந்தேகத்தை தர முதல் காரணமாக அமைந்தது.
ரூ.10 சாப்பாடு போட்டு ரூ.500 கோடி
வெறும் 10 ரூபாயில் மலிவு விலைக்கு சாப்பாடு போட்டு ஏழை மக்களை கவர ஆரம்பித்த விஜயபானு, .பொதுமக்களை முதலீடுதாரர்களாக மாற்றினார். அரசின் அனுமதி பெறாமல், எந்த அங்கீகாரமும் பெறாமல், முதலீடுகளை அள்ளி குவித்துள்ளார்.. இறுதியில், 2000 க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.500 கோடி வரை மக்களிடம் மோசடி செய்திருப்பதாக புகார் கிளம்பியது சேலம் மாவட்டத்தையே உலுக்கி எடுத்தது..
பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் இது தொடர்பான விசாரணையை கையில் எடுத்தனர்.. விஜயா பானு பெயரிலுள்ள வங்கி கணக்கை முடக்கினார்கள்.. அறக்கட்டளை சோதனை செய்து, ரூ.12 கோடியே 65 லட்சம், இரண்டரை கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளியை பறிமுதல் செய்தனர்.. இறுதியில் விஜயாபானு உள்ளிட்ட 4 பேரை கோவை சிறையில் அடைத்தனர்.
தேர்தலில் போட்டியிட்ட விஜயா பானு
ஆனால் ஜெயிலில் விஜயா பானுவை அடைத்துவிட்டால், எங்களுக்கு எப்படி பணம் கிடைக்கும்? அதனால் விஜயா பானுவை விடுவிக்க வேண்டும் என்று சொல்லி பாதிக்கப்பட்டர்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
"விஜயபானுவை விடுதலை செய்தால் பணத்தை, நாங்களே வாங்கிக் கொள்கிறோம்.. போலீசார் நடத்திய சோதனையால் தான் எங்களது பணம் கிடைக்காமல் போய்விட்டது" என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்ததை இங்கே நாம் நினைவுகூர வேண்டி உள்ளது.
விஜயா பானு தன்னை ஐபிஎஸ் என்று சொல்லி கொண்டு பலரை ஏமாற்றியிருக்கிறார்.. மேலும் விஜயா பானு ஒரு பாஜக நிர்வாகியாகவும் இருந்தவர்.. வேலூர் மாவட்ட பட்டியல் அணி தலைவராக உள்ளதாக பலரிடம் சொல்லி வந்துள்ளார்.. 2021 நகராட்சி தேர்தலில் 5-வது வார்டில் போட்டியிட்டு தோல்வியையும் தழுவியிருக்கிறார்.
பாஜக உறுப்பினர், திமுக ஆதரவாளர்
"பாஜக மேலிடம் பேசி, அரசு வேலை வாங்கி தருகிறேன், டெண்டர் எடுத்து தருகிறேன்" என்றெல்லாம் மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த விஷயம் பாஜக தலைமைக்கு தெரிந்து, விஜயா பானுவை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கிவிட்டது.
உடனே தன்னை திமுக ஆதரவாளர் என்று பலரையும் ஏமாற்ற ஆரம்பித்தார்.. சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனை வைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கி, அம்மாவட்ட மக்களை கவர்ந்துள்ளார்.
மோசடி ராணி - 2025
இப்போதைக்கு ஒரே ஒரு நகை மோசடியில் மட்டுமே, 17 வருடங்கள் சிறை தண்டனையும், 1 லட்சம் அபராதமும் விஜயா பானுவுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், விஜயா பானு மீது சென்னை, காஞ்சிபுரம், ஆந்திரா, வேலூர், சேலம் என பல்வேறு மாவட்டங்களில் வழக்குகள் உள்ளன...
அறக்கட்டளை தலைவர் மோசடி , ஐபிஎஸ் அதிகாரி மோசடி, அரசியல்வாதி மோசடி என பல கேஸ்கள் விஜயா பானு மீது நிலுவையில் உள்ளன.. இதுதொடர்பான விசாரணைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.. அதற்கெல்லாம் என்ன தண்டனை கிடைக்கும் என்று தெரியவில்லை. ஆனால். 2025-ல் மிகப்பெரிய மோசடி ராணியாக வலம் வந்த விஜயா பானுவை சேலம் மக்கள் லேசில் மறக்க முடியாது..!!












Click it and Unblock the Notifications