காவலர்களுக்கு வார விடுமுறை! டிஜிபி சைலேந்திர பாபு சொன்ன முக்கிய தகவல்! இவ்ளோ சிக்கல் இருக்கா?
சேலம் : சட்டம் ஒழுங்கு பிரச்சனை சமயங்களிலும், பண்டிகை காலங்களிலும் காவலர்களுக்கான கட்டாய வார ஓய்வு வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது, இதை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையில் சேலம் சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
விடாதீங்க.. ஆக்ஷனில் குதித்த டீம்.. போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

டிஜிபி சைலேந்திரபாபு
முன்னதாக பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகை, செல்போன்கள், இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அனுமதியின்றி வைத்திருந்த நாட்டு துப்பாக்கிகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சைலேந்திரபாபு, "சேலம் மாநகரில் தற்போது 40 சதவீதம் கொலை வழக்குகள் குறைந்துள்ளது.

போதை இல்லா சரகம்
லாட்டரி விற்பனை மற்றும் போதை பொருட்களை தடை செய்வதில் சேலம் சரகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சேலம் சரகத்தில் தற்போது வரை 120 கிராமங்கள் போதை பொருட்கள் இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் இல்லாத மாவட்டங்களாக சேலம் சரகத்தை உருவாக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

காவலர்களுக்கு விடுமுறை
கோவை குண்டுவெடிப்பு சம்பவம் போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனை சமயங்களிலும், பண்டிகை காலங்களிலும் காவலர்களுக்கான கட்டாய வார ஓய்வு வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது, இதை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு என்பதை கடைபிடிக்க, முடிந்த வரை அனைத்து காவல் நிலையங்களிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்,

மகிழ்ச்சி
உடல்நலன் மற்றும் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிட வாரம் ஒரு நாள் விடுப்பு தரவேண்டும். காவலர்களின் பிறந்தநாள், திருமண நாள் அன்று குடும்பத்துடன் நேரம் செலவிடும் வகையில் விடுப்பு வழங்கப்படவேண்டும் என கடந்த ஆண்டு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பிய நிலையில் அதில் குறைபாடுகள் இருப்பதாக புகார் எழுந்த நிலையில், தற்போது டிஜிபி விளக்கமளித்துள்ளதால் காவலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.