குப்பை மாதிரி வீசிட்டான்..பாலூட்டிய தாயை தவிக்க விட்ட பாலு! நீ பாத்து போ சாமி என நெகிழ வைத்த தாய்!
சேலம்: சேலத்தில் பெற்ற தாயை பிள்ளைகள் காரில் ஏற்றி வந்து சாலையோரம் குப்பையைப் போல வீசிவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மீட்க சென்றவரை பார்த்து நீ பார்த்து போ சாமி என மூதாட்டி சொல்லியதை பார்த்து கண்ணீர் வடித்து வருகின்றனர் சமூக வலைதளவாசிகள்..
நீங்கள் ஒரு நாள் வீட்டை விட்டு கிளம்பி மீண்டும் வீட்டுக்கு வருவதற்குள் நூற்றுக்கணக்கான முதியவர்களை உங்களால் பார்க்க முடியும். பலர் பெற்ற பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு ஒருவேளை சோற்றுக்கு கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் தான் இவர்கள்..

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு முதியவர்கள் பலரும் வீட்டிலிருந்து தானாகவே வெளியேறியோ அல்லது மகன் மருமகள்களால் விரட்டப்பட்டவர்களாக இருக்கின்றனர் என்பது கசப்பான உண்மை.
சோக சம்பவம்: ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கில் சம்பாதித்து பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வீடு கட்டி கொடுத்து கல்யாணம் முடித்து வைத்த பெற்றோர்களை கடைசி காலத்தில் கால் வயிற்று கஞ்சி கூட ஊற்றாமல் சாலையில் அனாதையாய் தவிர்க்கப்படும் பிள்ளைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆயிரம் சட்ட திட்டங்கள் போட்டாலும் பெற்றோர்களை சாலையில் ஒரு குப்பையை போல தூக்கி எறியும் சம்பவங்களும் நடைபெறத்தான் செய்கிறது அப்படி ஒரு சம்பவம் தான் சேலத்தில் நிகழ்ந்துள்ளது.

80 வயது மூதாட்டி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடுரோட்டில் கிடந்த சுமார் 80 வயது மூதாட்டியை வாகன ஓட்டிகள் சிலர் சாலையின் ஓரமாக தூக்கிவந்தனர். உடல் மெலிந்து கண்கள் சுருங்கி பேசவே முடியாமல் அசைவற்றுக் கிடந்த அந்த மூதாட்டி இடம் அவரைப்பற்றி விசாரித்த போது தான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் தனது பிள்ளைகள் தன்னை காரில் ஏற்றி வந்து இங்கே தூக்கி வீசிவிட்டு சென்றதாக கூறினார் .
நெகிழ்ச்சி பேச்சு: தனது மகனின் பெயரின் பேரனின் பெயரையும் குறிப்பிட்டுச் சொன்ன அந்த மூதாட்டி ஒரு கட்டத்தில் தன்னால் பேச முடியவில்லை என விம்மி அழத் தொடங்க.. பார்ப்போர் நெஞ்சில் ரத்தம் வடிந்தது. பாட்டி கவலைப்படாதீர்கள்.. உங்களை நான் மருத்துவமனையில் சேர்க்கிறேன் என அந்த ஓட்டுனர் சொல்ல அதெல்லாம் வேண்டாம் நீ பார்த்துப் போ என கூறியது காண்போர் நெஞ்சை கலங்க வைத்தது.

சிகிச்சை: இந்நிலையில் சாலையோரம் மூதாட்டி கிடப்பது குறித்து அந்த வழியாக சென்ற சிலர் இது குறித்து வாழப்பாடி போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மூதாட்டியை வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவரது பெயரை அவரால் சொல்ல இயலவில்லை. ஆனால் அந்த மூதாட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

தவிப்பு: "பெத்தமனம் பித்து" "பிள்ளை மனம் கல்லு" என்ற பழமொழிக்கேற்ப காரில் உயிரோடு கொண்டு வந்த மகன்கள் 80 வயது மூதாட்டியை சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் நடு ரோட்டில் வீசிவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. முதுமைப் பருவத்தில் பாசத்திற்கென ஏங்கும் முதியவர்களை ஏங்க விட்டு தவறிழைத்து விடாதீர்கள்.. இன்று அவர்கள் நாளை நீங்கள்..












Click it and Unblock the Notifications