கரூர் கூட்ட நெரிசலுக்கு அப்புறமும்.. சேலத்தில் பிரசாரம் தொடங்க அனுமதி கேட்ட விஜய்
சேலம்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகும், மீண்டும் சேலத்தில் பிரசாரம் செய்ய தவெகவினர் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளனர். டிசம்பர் 4 ஆம் தேதி சேலத்தில் இருந்து பிரசாரம் செய்வதற்கு தவெக நிர்வாகிகள் காவல் ஆணயரிடம் மனு அளித்துள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கழித்து விஜய் பிரசாரத்தை தொடங்க முடிவு செய்து இருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பிரசாரம் செய்து வந்தார். திருச்சியில் இருந்து முதல் முதலாக சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய், திமுகவை விமர்சித்தும், அம்மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் பேசினார்.

விஜய் மீண்டும் பிரசாரம்
ஒரு நாளில் 3 இடங்களில் பிரசாரம் செய்யும் வகையில் விஜய்யின் சுற்றுப்பயணத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல் நாளிலேயே விஜய்யை பார்க்க அதிகளவில் மக்களும் திரண்டனர். இதனால் முதல் சனிக்கிழமையிலேயே பெரம்பலூர் செல்ல முடியாமல் போனது. இதன் பிறகு ஒரு நாளில் இரண்டு இடங்கள் என பிரசார திட்டம் மாற்றப்பட்டது. இதில் சனிக்கிழமைகளில் விஜய் பிரசாரம் செய்தார்.
கடைசியாக கரூரில் விஜய் பிரசாரம் செய்தார். கடந்த மாதம் 11 ஆம் தேதி அன்று இரவு 7 மணிக்கு விஜய் கரூர் வேலுசாமிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். பெண்கள், குழந்தைகள் உயிரிழந்ததால் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் விஜய் தனது பிரசார பயணத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கூறினார்.
டிசம்பர் 4 ஆம் தேதி சேலத்தில்
இதன் பின்னர் மீண்டும் விஜய் சுற்றுப்பயணத்தை எப்போது தொடங்குவார் என கட்சி நிர்வாகிகள் இடையே பேச்சு எழுந்தது. மேலும் தேர்தலும் நெருங்குவதால் கட்சியினர் விஜய்க்கு கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் விஜய் மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். வரும் டிசம்பர் 4 ஆம் தேதி சேலத்தில் விஜய் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சேலத்தில் உள்ள தவெக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் சில இடங்களை கேட்டு காவல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். பிரசாரத்திற்கு போஸ் மைதானம், கோட்டை மைதானம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஆகிய இடங்களை குறிப்பிட்டு தவெகவினர் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கழித்து விஜய் மீண்டும் பிரசாரத்தை தொடங்க முடிவு செய்து இருக்கிறார்.
வழிகாட்டு விதிகள் என்ன?
கரூர் சம்பவத்திற்கு ரோடு ஷோக்கள், வழிகாட்டு விதிகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு நடத்தியது. இதில் ஆலோசனைக்கு பிறகு வரைவு அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது.
இதில், 5 ஆயிரம் - 10 ஆயிரம் வரை மக்கள் கூடும் கூட்டங்களுக்கு ரூ.1 லட்சம் காப்புத்தொகை செலுத்த வேண்டும். 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை கூடும் கூட்டங்களுக்கு ரூ.3 லட்சமும்; 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ரூ.8 லட்சம்; 50 ஆயிரத்துக்கும் மேல் ரூ.20 லட்சமும் முன்பணமாக செலுத்த வேண்டும். அமைப்பாளர் கூறியதைவிட 50 சதவீதம் அதிக கூட்டம் கூடினால் அது தீவிர விதிமீறலாக கருதப்பட்டு காப்புத்தொகை பிடித்தம் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ரோடு ஷோவிற்குதான் தடை
நிகழ்ச்சிக்கு முன்பு 2 மணி நேரத்திற்கு மேலாக மக்கள் காத்திருப்பது தவிர்க்கப்பட வேண்டும். நிகழ்ச்சிகளை 3 மணி நேரத்துக்குள் முடிக்க வேண்டும். அதிகபட்ச கால அளவை போலீஸ் அதிகாரி முடிவு செய்வார் உள்பட பல கடும் கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளன அரசின் இந்த முன்மொழிவுக்கான கருத்துக்களை அனைத்து கட்சிகளும் கடந்த 10 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதைத்தொடர்ந்து அரசியல் கட்சி நிர்வாகிகள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில்தான் விஜய் மக்கள் சந்திப்புக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. ரோடு ஷோவிற்குதான் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்கள் நடத்த தடையில்லை என்று தமிழக அரசு தெளிவுபடுத்தியது கவனிக்கத்தக்கது.
அனுமதி கிடையாது
டிசம்பர் 4 ஆம் தேதி கார்த்திகை தீப நாள் மற்றும் டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு நாள் என்பதாலும், டிசம்பர் 6 ஆம் தேதி வரை கூட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாற்று தேதியை தெரிவிக்க அறிவுறுத்தி தவெக நிர்வாகிகளை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்












Click it and Unblock the Notifications