கணவனை தேடி கைக்குழந்தையுடன் சேலம் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு வந்த கடலூர் பெண்.. விசாரித்தால் ட்விஸ்ட்
சேலம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து காதல் கணவரை தேடி குழந்தையுடன் சேலம் வந்த பெண், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பரிதவித்து போனார். காரணம்... அவருடைய கணவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருந்திருக்கிறது . இதனால் கவலை ஒருபக்கம் கைக்குழந்தை மறுபக்கம் என நீண்ட நேரம் பரிதவிப்புடன் இருந்தவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்த போது இந்த உண்மை தெரியவந்துள்ளது.
சேலம் புதிய பேருந்து நிலையம் எப்போதுமே மிகவும் பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலையம் ஆகும். 24 மணி நேரமும் சேலம் வரும் பேருந்துகள் மற்றும் சேலம் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் வந்து செல்லும் இடமாக இருக்கிறது. சேலம் புதிய பேருந்து நிலையத்தின் வளாகப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். தொடர்ந்து அந்த பெண் பேருந்து எதிலும் ஏறாமல் நின்று கொண்டிருப்பதை கண்டு சந்தேகம் அடைந்த ரோந்து போலீசார், அவரிடம் விசாரித்தனர்.

அவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்த வனிதா (வயது 20) என்பதும், காதல் கணவரை தேடி சேலம் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை மீட்டு பள்ளப்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அந்த பெண் கூறுகையில். எனது பெயர் வனிதா.. தான் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவள்.. கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றேன்.. அந்த பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி இன்பரசனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியது. நாங்கள் இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு குழந்தை பிறந்தது.
இதனிடையே வேலைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்ற கணவர் பல நாட்களாகியும் வீடு திரும்பவே இல்லை. மேலும் என்னால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த நான், கணவரின் நண்பருக்கு தொடர்பு கொண்டு விசாரித்தேன்.
அப்போதுதான் இன்பரசனுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும், தற்போது அவர் சேலத்தில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நான், என்னுடைய காதல் கணவரை தேடி கைக்குழந்தையுடன் சேலத்துக்கு வந்தேன் " என்று கூறியுள்ளார்.
இதையடுத்து வனிதாவை போலீசார் சேலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை வனிதா தனது கணவரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அப்போது தான் கள்ளக்குறிச்சியில் இருப்பதாக இன்பரசன் கூறியிருக்கிறார்- இதையடுத்து வனிதா, தன்னுடைய குழந்தையுடன் கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டு சென்றார். கைக்குழந்தையுடன் வந்த பெண், கணவருக்கு ஏற்கனவே திருமணமான தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த போதிலும், அவரை தேடியே சென்றுவிட்டார்.












Click it and Unblock the Notifications