வீரபாண்டி ராஜாவை டம்மியாக்கிய ஸ்டாலின்... பின்னணி காரணம் என்ன?
சேலம்: திமுகவின் மூத்த முன்னோடியான மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜாவை டம்மியாக்கி, அவரிடம் இருந்த மாவட்ட பொறுப்பாளர் பதவியை பறித்துள்ளார் ஸ்டாலின்.
வீரபாண்டி ராஜா மீது மு.க.ஸ்டாலினுக்கு அப்படி என்ன கோபம், அவர் மீதான குற்றச்சாட்டுகள் என்ன என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்வதற்கு முன்பு சேலம் மாவட்ட திமுகவை பற்றி அறிந்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
வீரபாண்டியார்
திமுகவின் மூத்த முன்னோடியான வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மகன் தான் இந்த ராஜா. வீரபாண்டி ஆறுமுகம் உயிருடன் இருந்தவரை சேலம் மாவட்டத்தில் திமுகவை கில்லியாக வைத்திருந்தார். அவரை எதிர்த்து அரசியல் செய்ய முடியாமல் இப்போது முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமியே பல நேரங்களில் தடுமாறியுள்ளார். காரணம் அந்தளவிற்கு கட்சிக்காக தடாலடி காரியங்களில் இறங்கக் கூடியவர் வீரபாண்டி ஆறுமுகம். இவரை சேலத்து சிங்கம் என்றும், வீரபாண்டியார் என்றும் தான் அடைமொழிகளில் திமுக நிர்வாகிகள் அழைத்தார்கள். துணிச்சல் மிக்கவர் ஆறுமுகம் என கருணாநிதியிடம் பெயரெடுத்தவர் அவர்.
மகனுக்கு பதவி
வீரபாண்டி ஆறுமுகத்தின் அரசியல் வாரிசாக செயல்பட்டவர் அவரது மூத்த மகன் செழியன். ஆனால் அவர் உடல்நலக்குறைவால் திடீரென காலமானதை அடுத்து அவரது இடத்திற்கு வந்தார் இரண்டாவது மகன் வீரபாண்டி ராஜா. அரசியலுக்கு வந்தவுடன் எம்.எல்.ஏ. சீட்டும் வாங்கித்தரும் படி தந்தை வீரபாண்டி ஆறுமுகத்திடம் ராஜா நச்சரிக்கத் தொடங்கினார். இதையடுத்து இது குறித்து கருணாநிதியிடம் ஆறுமுகம் பேச, அவரோ பார்க்கலாம் என சொல்லியுள்ளார். உடனே அதைக்கேட்ட ஆறுமுகம், அப்ப ஸ்டாலினுக்கும் சீட் கொடுக்கமாட்டீங்களா தலைவரே என அவரது முகத்தை பார்த்து நேருக்கு நேராக கேட்டு மகன் ராஜாவுக்கு எம்.எல்.ஏ.சீட் பெற்றுக்கொடுத்தார்.
கோஷ்டிப்பூசல்
வீரபாண்டி ஆறுமுகம் உயிருடன் இருந்தவரை மு.க.ஸ்டாலினுடன் அவர் சுமூகமான உறவை பேணியதில்லை. காரணம், அப்போது திமுக இளைஞரணி மாநில துணை செயலாளராக இருந்த ராஜேந்திரனுக்கு ஸ்டாலின் அதிகம் இடம் கொடுக்கிறார் என்றும், இதனால் சேலம் மாவட்டத்தில் ராஜேந்திரன் கோஷ்டி அரசியல் செய்வதாகவும் ஆறுமுகம் புகார் கூறுவார். ஒரு கட்டத்தில் திமுக பொதுக்குழுவில் சென்னையை சேர்ந்த திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர், வீரபாண்டி ஆறுமுகத்தை எச்சரிக்கும் வகையில் பேசியதெல்லாம் வரலாறு. இப்படி பல உதாரணங்களை கூறலாம். இதனால் வீரபாண்டி ஆறுமுகத்துக்கும் ஸ்டாலினுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்தது.
ஏமாற்றம்
இதனிடையே வீரபாண்டி ஆறுமுகம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து, சேலம் மாவட்டத்தை மூன்றாக பிரித்து வீரபாண்டி ராஜாவுக்கு மாவட்டபொறுப்பாளர் பதவி வழங்கினார் ஸ்டாலின். ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் அவரது தந்தையை போல் கட்சிப்பணியில் களப்பணியாற்றுவார் என நம்பிக்கை வைத்து வீரபாண்டி ராஜாவுக்கு அந்த பொறுப்பை வழங்கினார் ஸ்டாலின். சேலம் மாவட்டத்தில் திமுகவை இன்னும் மென்மேலும் வளர்த்து எடுப்பார் என எண்ணிய ஸ்டாலினுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மீண்டும் ராஜேந்திரன் அணியுடன் மோதல், தந்தைக்கால அரசியலை மனதில் வைத்துக்கொண்டு அதட்டல் மிரட்டல் என ராஜா இருந்தது ஸ்டாலினுக்கு சற்றும் பிடிக்கவில்லை.
அலட்சிய பதில்
சட்டமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் திமுக அடைந்த தொடர் தோல்வி ஸ்டாலினை கொந்தளிக்க வைத்தது. மோடி மீது இருந்த எதிர்ப்பு அலை காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. அதைத்தவிர சேலம் மாவட்டத்தில் சொல்லிக்கொள்ளும் வகையில் , குறிப்பாக ஸ்டாலின் எதிர்பார்த்தது போல் எந்த வளர்ச்சியும் இல்லை. மாறாக வீரபாண்டி ராஜா மீது அடுக்கடுக்காக புகார் மனுக்கள் தான் அறிவாலயத்துக்கு சென்றன. நமக்கு கிடைத்த தகவலின் படி, நூற்றுக்கணக்கில் வீரபாண்டி ராஜா மீது மட்டும் புகார் கடிதங்கள் தலைமைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மாற்றம்
மேலும், சேலம் மாவட்ட திமுகவில் புதிதாக இணைந்த இளைஞர்கள் மாற்றத்தை விரும்பும் விவரம் ஏற்கனவே செயல்பட்ட ஒ.எம்.ஜி.குரூப் மூலம் ஸ்டாலினுக்கு கிடைத்தது. சரி, உள்ளாட்சி தேர்தல் முடியட்டும், ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என விட்டு வைத்த அவருக்கு சேலம் மாவட்டத்தில் தோல்வியே பரிசாக கிடைத்தது. இதனால் இனியும் விட்டுவைத்தால், நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டினால் அது சட்டமன்ற தேர்தலுக்கு பாதகமாகிவிடும் என முடிவெடுத்து ஸ்டாலின் கட்சியில் களையெடுப்புகளை தொடங்கியுள்ளார். நாம் ஏற்கனவே இது குறித்து கட்சியில் களையெடுப்பை தொடங்கும் ஸ்டாலின் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். குறிப்பாக சேலம், மாவட்டத்தில் விரைவில் மாற்றம் இருக்கும் என கூறியிருந்தோம்.
கட்சியில் களையெடுப்பை தொடங்கும் ஸ்டாலின்... விரைவில் நிகழவுள்ள மாற்றங்கள்
அவப்பெயர்
இதனிடைடே வீரபாண்டி ராஜா மீது பணமோசடி புகாரும் உள்ளன. சிவசுப்பிரமணியம் என்பவரிடம் ஒரு கோடி ரூபாய் பெற்றுக்கொண்டது உள்ளிட்ட பல புகார்கள் உள்ளதால், இந்த அறுவைச் சிகிச்சையை செய்திருக்கிறார் ஸ்டாலின். எல்லாவற்றுக்கும் மேலாக அண்மையில் நடந்த திமுக செயற்குழுவில் துரைமுருகனை பார்த்து குரலை உயர்த்தி ராஜா பேசியது ஸ்டாலினை கொதிப்படைய வைத்துள்ளது. அவரின் மேனரிஸத்தை பார்த்து கோபமான ஸ்டாலின், ராஜாவை களையெடுக்க வேண்டும் என அந்த கூட்டத்திலேயே ஸ்டாலின் முடிவு செய்துவிட்டாராம். அவருக்கு பதில் எஸ்.ஆர். சிவலிங்கம் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவலிங்கம் வகித்து வந்த சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பு முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதியிடம் வழங்கப்பட்டுள்ளது. வீரபாண்டி ராஜாவுக்கு இப்போது கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு செயலாளர் பொறுப்பில் இதற்கு முன்னர் செல்வகணபதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.