யூ-டர்ன் போட்டு சமஸ்கிருதம் பக்கம் திரும்பி.. நினைத்ததை சாதித்து வரும் பா.ஜ.க - கூகுளால் சர்ச்சை!
கூகுள் டிரான்ஸ்லேட்டில் தமிழ் உள்பட ஏராளமான மொழிகள் உள்ள நிலையில் தற்போது சமஸ்கிருதம் உட்பட 24 மொழிகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.
கூகுள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு சேவையான கூகுள் டிரான்ஸ்லேட் மூலம் நமக்குத் தெரியாத மொழிகளின் அர்த்தத்தை அறிந்து கொள்ளலாம்.
இந்த கூகுள் டிரான்ஸ்லேட்டில் தமிழ் உட்பட உலகின் ஏராளமான மொழிகள் இருந்து வருகின்றன. இந்நிலையில், சமஸ்கிருதம் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.
உலகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... அமெரிக்கா, சீனா நாடுகள் அச்சம் - 4 வது அலை தாக்குமா?
கூகுள் டிரான்ஸ்லேட்
உலகின் மிகப்பெரும் தேடுபொறியைக் கொண்டுள்ள கூகுள் நிறுவனம் ‛டிரான்ஸ்லேட்' எனப்படும் மொழிபெயர்ப்பு சேவையையும் அளித்து வருகிறது. கூகுள் டிரான்ஸ்லேட்டில் தமிழ், இந்தி, வங்காளம், கன்னடம், பிரெஞ்சு, மலையாளம், உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகள் ஏற்கனவே உள்ளன.
கூகுள் டிரான்ஸ்லேட் மூலம் குறிப்பிட்ட வார்த்தைகளையோ, பத்திகளையோ நமக்குத் தேவையான மொழிகளில் மொழி மாற்றம் செய்து அறிந்துக்கொள்ளலாம்.
புதிதாக சமஸ்கிருதம்
இந்நிலையில், கூகுள் டிரான்ஸ்லேட் மற்றும் கூகுள் சர்ச் ஆகியவற்றில் 24 மொழிகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சேவை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இந்த 24 மொழிகளில் சமஸ்கிருதம், போஜ்புரி, டோக்ரி உள்ளிட்ட 8 இந்திய மொழிகளும் உள்ளன. இதன் மூலம் இந்திய மொழிகளில் 19 மொழிகள் இனி கூகுள் டிரான்ஸ்லேட்டில் கிடைக்கும்.
30 கோடி பேர் பயனடைவார்கள்
புதிதாக 24 மொழிகள் இணைக்கப்பட்டுள்ளதன் காரணமாக 30 கோடி மக்கள் பயனடைவார்கள் என கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்தபிறகு சமஸ்கிருதத்தை முன்னெடுத்து வரும் நிலையில், கூகுளில் சமஸ்கிருதம் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்து வருகிறது.
சமஸ்கிருத சர்ச்சை
மத்தியில் பா.ஜ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து மொழி தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்தி மொழி திணிப்பு, சமஸ்கிருதத்திற்கு முன்னுரிமை ஆகிய பா.ஜ.க அரசின் செயல்பாடுகள் எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன. ஆனால், பா.ஜ.கவினர் தொடர்ந்து சமஸ்கிருதம், இந்தியை முன்னிறுத்தி பேசி வருகின்றனர்.
சமஸ்கிருதம் மொழி மட்டுமல்ல
சமீபத்தில் கூட, மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா, "சமஸ்கிருதம் நம்மை இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லும் மொழி, சமஸ்கிருதம் ஒரு மொழி மட்டுமல்ல, அது சமூகத்தில் பல்வேறு நவீன முன்னேற்றங்களை அடைவதற்கான பாதை" எனப் பேசியிருந்தார்.
மேலும், மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "இந்தியாவின் பாரம்பரியம் கொண்ட மொழி என்றால் அது சமஸ்கிருதம். சமஸ்கிருதம் என்பது ஒரு மொழி மட்டும் அல்ல அது ஒரு உணர்வு." எனப் பேசினார்.
கங்கனா ரனாவத்
பா.ஜ.க அரசின் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து சர்ச்சைகளில் சிக்கும் நடிகையான கங்கனா ரனாவத்தும், சமீபத்திய இந்தி மொழி திணிப்பு சர்ச்சையின்போது சமஸ்கிருதம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
நமது நாட்டின் தேசிய மொழி இந்தி இல்லை. அது சமஸ்கிருதமாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன். கன்னடம், தமிழ், குஜராத்தி, இந்தி போன்ற மொழிகளை விட சமஸ்கிருதம் பழமையானது என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார்.
சமஸ்கிருத திணிப்பு?
பா.ஜ.கவினர் தொடர்ச்சியாக சமஸ்கிருதத்திற்கு முன்னுரிமை அளித்துப் பேசி வரும் இந்த நேரத்தில் கூகுளில் சமஸ்கிருதம் இணைக்கப்பட்டுள்ளது விவாதமாகியுள்ளது. இதில் மோடி அரசின் பங்கு நிச்சயம் இருக்கும் என்றும், சமஸ்கிருத திணிப்புக்கு எதிராகப் போராடவேண்டிய காலம் வந்துவிட்டது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.